ஒரு பயணமும் ஒட்டு மொத்த தோல்வியும்.
அனைத்து எம்.பி-க்களையும் மரியாதையோடு வரவேற்ற ராஜபக்ஷே, என்னைச் சுட்டிக்காட்டி, 'நீங்கள் எனக்கு எதிராகத் தமிழகத்தில் கடுமையாக முழங்கி வருகிறீர்கள்' எனச் சிரித்தார். உலகத்தையே ஜெயித்துவிட்டது போல இருந்தது அவருடைய அந்தச் சிரிப்பு. அமைதிக் காலத்தில் நான் ஒரு முறை ராஜபக்ஷேயை சந்தித்துப் பேசி இருக்கிறேன். அதை நினைவுகூர்ந்து பேசிய அதிபர், 'நீங்கள் என்னை சந்தித்தபோது, பிரபாகரனை நீங்கள் அழைத்து வந்தால், மீடியாக்களுக்குத் தெரியாமல் நமக்குள்ளேயே சமரசம் பேசி தக்க தீர்வுக்கு வழி வகுக்கலாம்' என நான் சொன்னேனே, நினைவிருக்கிறதா? இப்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள்... பிரபாகரனை காணவில்லையே..? அவரை உங்களுடன் அழைத்து வரவில்லையா?' எனக் கேட்டு மீண்டும் சிரித்தார்.
சபைக்கு நடுவே சாட்டையடிபட்ட வேதனையில் துடித்துப் போனேன். சூழல் என்னை அமைதி காக்கச் செய்தது. கனிமொழி, டி.ஆர்.பாலுவிடம் என்னை சுட்டிக்காட்டி பேசிய ராஜபக்ஷே, 'இவர் பிரபாகரனின் மிக நெருங்கிய கூட்டாளி. இக்கட்டான நேரங்களில் பிரபாகரனின் பக்கத்தில் நின்றவர். நல்லவேளை... கடைசி நேர இக்கட்டில் இவர் பிரபாகரனுடன் இல்லை. அப்படி இருந்திருந்தால் இந்நேரம்...' என்று வார்த்தையை முடிக்காமல் நிறுத்தினார். ஆணவமும் அகம்பாவமும் மதியை மறைக்க, சிறு எறும்புக்கும் தீங்கு விளைவிக்காத பாவனையில் அவர் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய நக்கலான பேச்சு என்னை மட்டுமல்லாது, இதர எம்.பி-க்களையும் முகம் சுளிக்கவே வைத்தது. அப்போதும், 'நீங்கள் ஒரு பௌத்தர். உங்களிடமிருந்து கருணையையும் இரக்கத்தையும்தான் எம்மக்கள் எதிர்பார்க்கிறார்கள்' என ராஜபக்ஷேயிடம் சொன்னேன். 'ரெண்டு வருடங்களுக்கு முன்பு அனைத்துக் கட்சி நிர்ணயக் குழு அமைச்சர் திசவிதாரன தலைமையில் தயாரித்த அறிக்கையின்படி, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கலாமே' என நான் சொன்னபோது, முகத்தில் அடித்தாற் போல, 'அது என்னோட பார்ட்... நான் பார்த்துக்கிறேன்' எனச் சொல்லிச் சிரித் தார் ராஜபக்ஷே. அதற்கு மேலும் என்னால் அங்கே நிற்க முடியவில்லை.''
Read more...
