Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

வெல்லத்தான் நினைக்கிறேன் -- பா (ஹிந்தி)



இந்த படத்தின் டிரைலேர் பார்த்தேன். ஆஹா அற்புதம் ஒரு ரசிகனாக இந்த படம் வெற்றி பெறவேண்டும் என்று இந்த படத்தின் அவுட்லைனை படித்தவுடனேயே  நினைத்தேன், அதாவது அபிஷேக்பச்சனின் மகனாக அமிதாப்பச்சன் நடிக்கிறார் என்று கேள்வி பட்டவுடனேயே இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியது. அதெல்லாம் போக, இளையராஜாவின் இசை இந்த டிரைலரை பாருங்க (ஆடியோ உடன்) சும்மா பின்னி இருக்கிறார் ராஜா. இந்த இசை நமக்கு ஏற்கனவே அறிமுகமானதுதான் (அது ஒரு கனா காலம் பாடல்) . ரொம்ப நாளா நம்ம மக்கள் ஒரு விஷயம் சொல்லுவாங்க (ராஜா இசையை புரிந்தவர்கள் அல்ல) தமிழர்களை தமிழ் பாடல் கேட்க வைத்தவர் ராஜா அப்படின்னு, ராஜாவின் பாடலை ஹிந்தி பேசும் மக்களும் கேட்டு ரசிக்கலாம் என்ன சரியான முறையில் அது அங்கே கொண்டு சேர்க்கப்படவில்லை. ஆனால் இதை ஒரு கடமையாகவே எடுத்துக்கொண்டு செயல்படும் பால்கி (இவர் தான் இந்த படத்தின் இயக்குனர்), அவர்கள் "ராஜாவின் இசையை இந்தியாவின் ஒரு பகுதிதான் (தெற்கு பகுதி) கேட்டிருக்கிறது இன்னொரு பகுதியும் கேட்க வேண்டும் என்பதற்காகவே அவர் ஏற்கனவே போட்ட பல பாடல்களின் மெட்டுகளை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்." என்று சொல்லி இருக்கிறார். இவருடையை முதல் படமான சீனிகம் (CHEENIKUM) பாடல்கள் மிகப் பெரிய ஹிட் என்பதை ஹிந்தி நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த முறையும் அது நடக்கும் என்றே தோன்றுகிறது. இந்த படத்தில் ராஜாவின் "சங்கத்தில் பாடாத.." மெட்டு  ஹிந்தியில் பாட போகிறது. இந்த படத்தின் டிரைலேர் பாருங்க அப்புறம் சொல்லுங்க ...


Read more...

இளையராஜா புறக்கணிப்பு முடிவதில்லை

புதுசா அறிமுகமாகும் ஒரு டைரக்டரோட (ஆர்.சுந்தர்ராஜன்) படமாச்சே, எப்படி இருக்குமோ ஏதா இருக்குமோனு பயந்துகிட்டே தியேட்டருக்குள் போனேன். இரண் டாவது ரீல்லேயே எனக்கு சரியான நோஸ் கட்!

துணிக்குப் போடற கஞ்சியைக் குடிச்சே வயித்தை நிரப்பிக்கிற ஏழ்மை; இருந்தாலும் பாடகனா ஆகணுங்கற லட்சியம் - இது கதாநாயகன் ரவி (மோகன்).
ரவியின் திறமையை வெளி உலகுக்குக் கொண்டுவர எல்லா முயற்சிகளையும் எடுத்து, அவ னைக் காதலிக்கவும் செய்யும் கதாநாயகி ராதா (பூர்ணிமா ஜெயராம்).
- இவங்க ரெண்டு பேரையும் சுற்றி, டைரக்டர் திரைக்கதையைப் பின்னியிருக்கும் அழகு அப்படியே அசத்திடுது.
'முதன்முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ' பாடலும், டி.வி-க்காக ரவி பாடும் இன்னொரு பாடலும் படமாக்கப்பட்டுள்ள விதம் டைரக்டரோட எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்குது! (இளையராஜாவும் எஸ்.பி.பி- யும் இவருக்கு அசைக்க முடி யாத இரு தூண்கள்!)
தனக்கு பிளட் கான்சர்ங்கறதை ராதாகிட்டே சொல்ல முடியாம ரவி திண்டாடறது, தன் மீதுள்ள காதலை அவ மறக்கணும்கறதுக்காக அவளை டீஸ் பண்றது, மூன்றாவது ஒரு மதுரை டாக்டர் (ராஜேஷ்) அறி முகமாறது - பின்பகுதி விவ காரங்கள்லே துளிக்கூட அமெச்சூர்த்தனமே தெரியலே!
படத்துலே என்னதான் குறை?
ஹீரோவோட பிளட் கான் சர், 'வாழ்வே மாய'த்தின் பாதிப்பு! டாக்டர் குமார் விஷயத்தில் 'அந்த 7 நாட்கள்' பாதிப்பு!
இருந்தாலும், ஒரு ஊக்க போனஸ் மாதிரி 48 மார்க் தரலாம்!

-பயணங்கள் முடிவதில்லை படத்தின்  "ஆனந்த விகடன்" விமர்சனம் தான் நீங்கள் மேலே பார்த்தது. ஹும்.. என்னத்த சொல்றது....? முடிஞ்சா அப்படியே "கலைஞனை மதிக்காத சமூகமே" படியுங்கள், முன்னாடியே படிச்சிருந்தா அதை ஞாபக படுத்திக்கொள்ளுங்கள். விகடனின் இளையராஜா புறக்கணிப்பு முடிவதில்லை போல.


Read more...

ஹலோ ஒரு (ரசிக) கிறுக்க ன் பேசுறேன் - 3


என்னடா "தளபதி" இவ்வளவு பெரிய ஏமாற்றத்தை தந்திடுச்சென்னு நினைச்சப்ப, நண்பர்கள் வற்புறுத்தல் காரணமாக "குணா" பார்க்க போனேன், எப்படியா இருந்தாலும் நம்மாளுதானே இசை. படம் என்னவோ பண்ணுச்சு. ஆனா அதை வெளில சொல்லிக்கலை. இந்த சமயத்துல ரஜினி-ன் அடுத்த படமான "அண்ணாமலை" இளையராஜா இல்லாம எடுக்கபட்டுச்சுன்னு, கேள்வி பட்டு ரொம்பவே நொந்து போயிட்டேன். இந்த முறை ரஜினி பிரிஞ்சதை ஏத்துக்க முடியலை, இந்த படத்தையே பார்க்க கூடாதுன்னு முடிவு செஞ்சேன். அது கூட இளையராஜவிற்காக இல்லைன்னு நான் நம்பினேன். ஏன்னா ரஜினியை அவரது நடிப்புக்காக எத்தனை பேரு ரசித்தார்கள் என்று தெரியாது. ஆனா ரஜினி நட்பிற்கு, தன்னை வளர்த்தவர்களுக்கு ஆதரவு தரக்கூடியவர் அப்படிங்குற குணத்தினாலேயே தான் எனக்கு ரஜினியை ரொம்ப பிடிச்சது. அப்படிப்பட்ட ரஜினி ராஜாவுடனான தனது நட்பை துண்டிச்சுக்கிட்டாரே அப்படின்னு நினச்சு மனசு ரொம்ப வெறுத்துடுச்சு அதனாலத்தான் அந்த படத்தை பார்க்க வேண்டாம்னு முடிவு செஞ்சேன். ஆனா அந்த படம் கூட பாலச்சந்தர் என்ற தனது குருவின் மேல் கொண்ட பக்தியினால பண்றார்னு நம்ப மனம் மறந்தது. அதாவது என்னையும் அறியாமல் ராஜாதான் என் மனசில் ஆழமா பதிஞ்சுட்டார். அப்படிங்கிறதை இந்த விஷயம் நன்கு உணர்த்தியது. சரி இனிமேல் நம் விருப்ப லிஸ்ட்-ல் ரஜினி இல்லை. அடுத்த வாரத்தில் இன்னொரு அடி, அதாவது பாலச்சந்தர் தயாரிக்கும் ஒரு படத்தை மணிரத்தினம் இயக்குவதாகவும் அதற்கு ராஜா இசை இல்லைன்னும் ஒரு செய்தி. என்னடா இது நமக்கு வந்த சோதனை பின்ன சின்ன வயசிலிருந்து முதலிடத்தில் இருந்த ரஜினியையே ஒதுக்கியாச்சு. இப்ப என்னடான்னா விருப்ப இயக்குனரையும் இழக்கணும் போல இருக்கே. அப்போ மணிரத்தினம் பல கல்லூரி மாணவர்களின் விருப்ப இயக்குனர். சாமி கும்பிடுரப்ப எல்லாம் இந்த செய்தி பொய்யா இருக்கணும்னு வேண்ட ஆரம்பிச்சேன். ஆனா நான் சாமியை  சரியா கும்பிடலை போல, என் வேண்டுதல் பலிக்கல. அந்த படத்துக்கான விளம்பரம் வந்துச்சு, அதில் இசை ஏ.ஆர்.ரஹ்மான் அப்படின்னு போட்டிருந்துச்சு. நான் அதை பெருசா எடுத்துக்கல. ஏன்னா ராஜா பார்க்காத ஆளுங்களா..? நிச்சயம் ராஜா ஜெய்ப்பார் அப்படின்னு நான் ஆணித்தனமா நம்புனேன். படம் ரிலீஸ் ஆகி மக்கள் எல்லாம் அந்த படத்தின் பாடலகளை வெகுவாக பாராட்டி பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு ரொம்ப நெருக்கமான ஒரு நண்பன் கூட முதன் முதலாக சண்டை எல்லாம் போட்டேன். எல்லாரும் சொன்னார்கள் இதுல என்ன இருக்கு அன்றைக்கு எப்படி ராஜ பெரிய ஆளா ஆனாரோ அது மாதிரிதான் இதுவும் மேலும் ராஜாவும் சும்மா இல்லை அவரு நிறைய சாதனைகள் எல்லாம் பண்ணிட்டார்னு. மனம் நம்ப மறுத்துச்சு, கிட்டத்தட்ட இந்த கால கட்டத்துல தான் நான் முழு பைத்தியமானேன். அது எப்படி இவ்வளவு சாதனைகள் செஞ்ச ஒரு ஆளு ஒரு படத்துலையே கீழே போயிருவார்..? குமுதம் இதழில் "ரோஜா" படத்துக்கான விமர்சனத்துல இசை பற்றி குறிப்பிடும் போது "பாடல்களில் ஒரு புது தொனி தெரிகிறது. (இளையராஜாவிற்கு ஒரு சக்களத்தி)" அப்படின்னு போட்டிருந்தார்கள். ராஜாவிற்கு போட்டியா..? ஹ ஹா..எத்தனை பேரை பார்த்தவர்  ராஜா..? டி.ராஜேந்தர்,சங்கர்-கணேஷ்,பாலபாரதி,தேவா,ரவீந்திரன்,தேவேந்திரன் இப்படி பல பேரை சம காலத்தில் சர்வ சாதரணமாக ஓரம் கட்டியவர். அந்த பட்டியலில் இந்த ஏ.ஆர்.ரஹ்மானும் ஒன்று.  ராஜாவை பற்றிய விஷயங்களை தேடி தேடி படிக்க ஆரம்பித்தேன். மணிரத்னத்தின் பெயரும் விருப்ப லிஸ்டிலிருந்து தூக்கியாச்சு. "புதிய முகம்" என்று ஒரு படம் அதிலும் பாடல்கள் சூப்பர் ஹிட் அப்படின்னு சொன்னாங்க. அந்த படத்தை பார்த்தேன், அந்த படத்திலும் ஒரு குறை தெரிந்தது. சொல்ல மறந்துட்டனே "ரோஜா" படம் பார்த்த பொழுது எல்லோரும் படத்தையும் இசையையும் சொன்னபொழுது என் மனதில் அந்த படத்தை பற்றி ஆஹா என்றோ ஓஹோ என்றோ தோன்றவில்லை. சொல்லப் போனால் அந்த படத்தின்  பின்னணி இசையில் ஒரு குறையே தென்பட்டது. இதை சொன்ன போது நண்பர்கள் எல்லோரும் எனக்கு முழு பைத்தியம் பிடித்ததை உறுதி செய்தார்கள்.
சரி இனிமே நாம என்ன சொன்னாலும் கேட்கவா போறாங்க. இந்த சமயத்துல கூட எனக்கு உதவியது ராஜாவின் பாடல் தான். 'எது வந்தால் என்ன எது போனால் என்ன என்றும் மாறாது வானம் தான்..". வான் போல இளையராஜா இருக்க என்ன கவலை. கிட்டத்தட்ட இந்த சமயத்தில் தான் கமலின் "தேவர் மகன்" வெளிவந்தது. எல்லா பாடலும் அருமையா இருந்துச்சு. ஆனா பாருங்க எல்லா ஊடகங்களிலும் விமர்சனங்களிலும் ரொம்ப அருமை பெருமையா எழுதாமல் இதெல்லாம் இளையராஜாவின் கடமை அதாவது இளையராஜாவிற்கு சாதரண விஷயம் என்பது போல. அடுத்து "ஜென்டில் மேன்","காதலன்" அப்படின்னு ஹிட் கொடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் மேலே ஏற ஆரம்பித்தார். ஆனால் அந்த காலத்திலும் இளையராஜா கொஞ்சம் கூட தரம் குறையாமல் பாடல்களை கொடுத்தார் உதாரணத்திற்கு சிலவை இங்கே "ராஜகுமாரன்","வள்ளி","சிறைச்சாலை","மகாநதி","பிரியங்கா","மகளிர் மட்டும்" இப்படி பல படங்கள் இவற்றில் இளையராஜாவின் பங்களிப்பு  எல்லாம் பெரிய அளவில் பேச படவில்லை, ராஜாவின் ரசிகர்களை தவிர. அல்லது இவை அந்த  பாடல்களுக்குரிய தகுதியான இடத்தை பெறவில்லை. இவை எல்லாம் எப்படி நிகழ்ந்தது..? ராஜாவை எல்லாரும் ஒதுக்கிய பொழுது என்னை போன்ற (முழு அல்லது அரை) பைத்தியங்களை எல்லாம் ஒரு தனி தீவில் விட்டுவிட்டு மற்றவர்கள் எல்லாம் சென்று விட்டதை போலவே நான் உணர்ந்தேன்.  இதன் பிறகு ராஜா எவ்வளவோ ரொம்ப ரொம்ப சாதரண படங்கள் பண்ணி இருக்கிறார், சில படங்கள் ரிலீஸ் ஆகமலே இருந்திருக்கின்றன (பரணி,பூஞ்சோலை,காதல் சாதி இன்னும் பல)
 ஆனால் எந்த படமானாலும் அந்த படத்தின் ஆடியோ கேசட் அல்லது சி.டி. வாங்குவதை ஒரு கடமையாகவே செய்ய ஆரம்பித்தேன்.  இன்னும் ஞாபகம் இருக்கிறது அன்று "தேவதை" படத்தின் ஆடியோ ரிலீஸ் என்று. சாப்பிட வைத்திருந்த காசில் ஆடியோ கேசட் வாங்கிவிட்டு கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் நடந்தே நான் தங்கி இருந்த இடத்திற்கு சென்றேன். இதை நான் பெருமையாக இப்பொழுது கூட நினைத்து பார்க்க முடியவில்லை. மாறாக இது எல்லாம் அதி  அற்புதமான இசையை வழங்கிய ஒரு மகா கலைஞனுக்கு செய்யும் ஒரு கடமையாகவே பார்த்தேன், பார்க்கிறேன். மேற்சொன்ன அந்த  படத்தின் பாடல்களிலும் நான் "இளமை ஊஞ்சலாடுகிறது" -வில் பார்த்த ராஜா தெரிகிறார். எல்லாரும் சொன்னாங்க ராஜா ஹிட் டைரக்டர்களின்  படத்திற்கு இசை அமைப்பதில்லை, அவர் முன்னாடி பண்ண மாதிரி அவர் இசை அமைச்சாலே படங்கள் ஓடணும்னு எதிர்பார்க்க முடியாது, அவரால் இளைய தலைமுறையினருக்கு ஏற்ற மாதிரி இசை அமைப்பதில்லை, அவருக்கு தலைகனம் அதிகம், இயக்குனர்கள் சொல்வதை கேட்பதில்லை தனக்கு தோன்றியவற்றை தான் இசை அமைக்கிறார், இப்படி பல குற்றச்சாட்டுகள். நான் எதையும் நம்புவதில்லை, சொல்லப்போனால் எல்லாவற்றிற்கும் (ஒரு வெறியனா) என்னிடத்தில் நியாயமான பதில்கள் இருக்கு. ஒரு விஷயம் ராஜா 90 களுக்கு பிறகு நல்ல பாடல்களை தருவதில்லை என்று சொல்பவர்களுக்காக ஒரு லிஸ்ட்..
பூமணி, ஒரு ஊர்ல ஒரு ராஜ குமாரி,கட்டுமரக்காரன்,பூந்தோட்டம்,அவதாரம்,வீட்ல விசேஷங்க, காக்கை சிறகினிலே,இவன்,HOUSEFULL,காதல் கவிதை,என்னருகே நீ இருந்தால், சக்கரை தேவன்,வியட்நாம் காலனி,பிரியங்கா,ஜூலி கணபதி,காத்திருக்க நேரமில்லை,காதல் சாதி(வெளியாகவில்லை இதுவரை)
இந்த லிஸ்ட் இன்னும் பெரியது, இந்த படங்களின் பாடல்களை கேளுங்கள் கேட்டுவிட்டு இந்த பாடல்கள் ஏன் அவை வெளிவந்த காலகட்டத்தில் பெரிய அளவில் பேசப்படாமல் போனது என்பதற்கு காரணம் சொல்லுங்கள். பிறகு சொல்கிறேன் இளையராஜா ஏன் ஹிட் இயக்குனர்களின் படங்களுக்கு இசை அமைப்பதில்லை என்றும், ஏன் தனக்கு தோன்றியவற்றை மட்டும் இசை அமைக்கிறார் என்றும்.   இதோ இன்றைக்கு இந்த அளவு வந்தபிறகும் கூட இளையராஜாவை அந்த இடத்திலிருந்து இறக்க மனசு வரவில்லை, எனக்கு தெரிந்து இறக்கும் வரை இப்படியேதான் இருப்பேன். இதை பிடிவாதம் என்று ஒத்துக்கொள்ள மாட்டேன். ஏன்னா இன்றைய பழசி ராஜா வரை ராஜாவின் பாடல்களை என்னால் அன்று எப்படி "முரட்டு காளையை" ரசித்தேனோ அதே முழு மனதுடன் ரசிக்க முடிகிறது.
நான் அடித்து சொல்றேன் வருங்காலங்களில்  இளையராஜாவால் இன்னொரு "மௌன ராகம்","சிந்து பைரவி","முதல் மரியாதை" தர முடியும். இதற்கு அவருக்கு எல்லாம் வல்ல அந்த இறைவன் நிச்சயம் உதவுவான்.  இளையராஜாவை இன்று மதிக்காமல் அல்லது அவரது இசையை உதாசீனம் செய்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள், ராஜா ஒரு இசை பெருங் கடல் அதை நீங்கள் போற்றி புகழ வேண்டாம் எங்களைப் போல், ஆனால் குறைந்த பட்சம் குறை சொல்லாமலாவது இருக்கலாமே. இதை நீங்கள் ராஜாவுக்கு செய்யும் மரியாதையாக கூட நினைக்கவேண்டாம், இசைக்கு செய்யும் மரியாதையாக நினையுங்கள். இசை வேறுபாடுகளை களைய கூடியது, இங்கு வேண்டாமே விரோதம்.   இதை சொன்னால் என்னை கிறுக்கன் என்கிறார்கள்.


Read more...

ஹலோ ஒரு (ரசிக) கிறுக்க ன் பேசுறேன் - 2

கால்வாசி கிறுக்கனா மாறினாலும் அந்த தலைவர் (ரஜினி) வெறி மனதை தாண்ட மறுத்தது. கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஒரு இடத்தில் சின்ன வயதில் எந்த சாயமும், அதாவது எந்த ஒரு தமிழ் நடிகரின் ஆதரவாளனாக இல்லாமல் வளருவது என்பது கொஞ்சம் கஷ்டமும் கூட. வளர்ந்து நமக்கு விவரம் தெரிந்த பிறகு வண்ணமில்லாமல் தோன்றலாம் ஆனால் எதையும் தெளிவாக புரிந்து கொள்ள முடியாத அந்த சிறு வயதில் ஒரு வண்ணம் அவசியம் முன்னமே சொன்னது போல மற்றவர்களோடு சேர்ந்து விளையாடுவதற்காகவாது அது தேவை பட்டது.
கழுகு என்று ஒரு படம், ஏற்கனவே கூட படிக்கிற பசங்க எல்லாம் பாத்துட்டு "பயமா இருக்குதுன்னு" சொல்லி இருந்தாலும் தலைவருக்காக பார்க்க கிளம்பினேன். படத்தை முழுசா பர்ர்த்ததை விட, கை விரல்களுக்கு நடுவில் பார்த்தது தான் அதிகம். அவ்வளவு பயமா இருந்தது அதுக்கு காரணம் இளையராஜாவின் பின்னணி இசை என்பதை காலம் தான் சொல்லியது. சங்கிலி முருகன் ஒரு மந்திரவாதியாக நடித்திருப்பார் அவர் முகம் கண்களை விட அந்த காங்கோ வாத்திய கருவியின் பீட்டு நிறைய அதிர்வை தந்தது. கிட்டத்தட்ட
 அதே கால கட்டத்தில் வந்த "குரு" கமல் நடித்த அந்த படம் இலங்கை வானொலியில் அடிக்கடி அந்த "ஆடுங்கள் பாடுங்கள்" பாடலை போட்டு கலக்கி கொண்டிருந்தார்கள். இருந்தாலும் தலைவர் விதி அந்த படத்திற்கு போக அனுமதிக்க வில்லை. ஆனால் வீட்டிலுள்ளவர்களால்  அந்த படத்திற்கும் வலு  கட்டாயமாக அழைத்து செல்லப்பட்டேன். அந்த படத்தில் கமல் குருவாய் தோன்றும் பொழுதெல்லாம் எழுப்பப்படும் இசை அப்படியே நாமளும் குதிரையில் போனால் எப்படி இருக்குமோ அப்படி இருந்துச்சு. அட என்னடா இப்படி ஒரு இசையை கமல் படத்தில் போட்டுட்டாரே இந்த ஆளு. அப்படின்னு நினைக்கும் பொழுது "தனிக்காட்டு ராஜா" வந்தது எல்லா பாட்டும் சும்மா அப்படி இருந்தது. அப்ப கூட எனக்கு இதெல்லாம் இளையராஜாவிற்கு சாதாரணம் என்பதை  நம்ப மறுத்தேன்.

அப்பொழுதெல்லாம் இளையராஜாவின் பாட்டுக்கள் ஹிட் என்பது எழுதப்படாத ஒரு விதி. இளையராஜா ஒரு பேட்டியில் சொன்னதைபோல "அதை கேட்க வேண்டியது தமிழக மக்களின் தலை விதியாக " மாறிப் போயிருந்தது. "அழகே உன்னை ஆராதிக்கிறேன்" , "ப்ரியா"  என படங்கள் வரிசை யாக ஹிட் அடித்த நேரம். கொஞ்சம் கொஞ்ச மாக மனசு இளையராஜாவை நோக்கி நகர்ந்தது. சரி தலைவரையும் விட வேணாம் ராஜாவையும் விட வேணாம் ஏன்னா தலைவர் படங்கள் எல்லாவற்றிற்குமே ராஜாதானே இசை. அதனால் ரஜினி பாதி ராஜா பாதின்னு வச்சுக்கலாம்னு முடிவு பண்ணியது மனசு. அப்பவெல்லாம் தலைவர் படத்திலேயே பிடிக்காத படம் "ராணுவ வீரன்" ஆனா அதை வெளிப்படையா சொல்ல முடியலை அல்லது தெரியலை. ஆனா அந்த படத்தில் ஒரு குறை தென் பட்டது. அது ராஜாவின் இசை என்பதை வளர்ந்த பிறகே தெரிந்து கொண்டேன். இந்த காலகட்டத்துக்கு அப்புறம் எனக்கு நினைவில் இருப்பது  "புன்னகை மன்னன்" படத்தின் பாடல்கள் வெளியான புதிதில் அந்த படத்தின் கேசட்டை  நண்பர் ஒருவரிடமிருந்து அவ்வப்பொழுது இரவல் வாங்கி கேட்பது வழக்கம். அதில் போட்டிருக்கும் இளையராஜா படத்துடன் பேசி இருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எப்படி இந்த இசை இவருக்கு சாத்தியமானது. ஒரு பக்கம் "சலங்கை ஒலி" மாதிரியான சாஸ்திரிய இசை,  "முதல் மரியாதை", "மண்வாசனை" போன்ற கிராமத்து பாடல்கள், இன்னொரு பக்கம் "புன்னகை மன்னன்" மாதிரியான மேற்கத்திய இசை. அப்புறம் இசையில் வேற என்னதான் இருக்குது...? எல்லாமே என் வசம் இப்பவாது என்னை முழுமையா நம்புறியா இல்லையா என்றது "புன்னகை மன்னன்" கேசட்டின் மேலிருந்த இளையராஜா. விடுவோமோ..? ஹும் நாங்க எல்லாம் கொள்கை குலவிளக்கு. எங்க கிட்டயேவா. இந்த படங்களில் சம்மந்த பட்டிருந்தவர்களும் என்னுடைய விருப்ப லிஸ்ட்-ல் பிடித்த இயக்குனர்களாக பாரதிராஜாவும்,வைரமுத்துவும்,மணிவண்ணனும் இருந்தார்கள். திடீரென்று ஒரு குமுதம் இதழில் வைரமுத்து இனிமே இளையராஜா கூட பணிபுரிய மாட்டார் என்ற செய்தி படித்து. அட இது என்னடா என்று நினைத்து, வைரமுத்துவை என்னுடைய விருப்ப லிஸ்ட்-இலிருந்து தூக்கி விட்டேன். அப்புறம் பார்த்தா பாரதிராஜாவும் போறார்னு போட்டிருந்துச்சு. ஆனால் அவரை அவ்வளவு சீக்கிரம் தூக்க முடியவில்ல அத்துடன் அப்பொழுதுதான் "வேதம் புதிது" பார்த்தேன். ஆனா இவ்வளவு திறமையான படத்தில் இளையராஜாவிற்கு இடமில்லையே அப்படி என்றால் ....? என்று யோசித்து கொண்டிருக்கும் போதே வந்துச்சு "மௌன ராகம்" இளையராஜா அனேகமாக பாரதிராஜாவின் மேலிருந்த கோபத்திலேயே இந்த மாதிரியான படங்களுக்கு ட்யூன் போட்டிருக்க வேண்டும், இதை நான் எப்படி சொல்கிறேன் என்றால், இளையராஜா திரை துறையின் தனிக்காட்டு ராஜாவாக வலம் வரத்துவங்கிய பொழுதில் வந்தது "ஒரு தலை ராகம்" எல்லா பாடல்களும் ஹிட், ராஜாவிற்கு மாற்றா டி.ராஜேந்தர் என்ற விமர்சனம் வந்ததாம், அப்பொழுது தான் அவர் "பயணங்கள் முடிவதில்லை" கொடுத்ததாக ஒரு பத்திரிகையில் படித்தேன். எப்படியோ "மௌன ராகம்", "இதயகோவில்", என வரிசையா ஹிட்.  சரி பாரதிராஜா போனால் என்ன அதான் மணிரத்னம் இருக்காரே, அவரது புதுமையும் மிகவும் பிடித்திருந்தது. வந்தது "நாயகன்" என் மனதில் ரஜினி பாதி ராஜா பாதி என்ற நிலைமை மாறி ராஜா முக்கால், ரஜினி கால் என்ற நிலைமை உருவானது. ரஜினியும் ராஜாவை விட்டுவிட்டு "மனிதன்", "ராஜா சின்ன ரோஜா" போன்ற படங்களை பண்ணினார். ஆனால் அப்பொழுதெல்லாம் ரஜினியை சுத்தமா வெறுக்க முடியவில்லை. "அக்னி நட்சத்திரம்" வந்தது யாரவது அந்த படத்தை பத்தி பேசினாலே அவுங்கதான் எனக்கு நண்பர்கள். "ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா.." பாடலின் படமாக்கல் மணிரத்தினம் மீதான மரியாதையை  கூட்டி  போயிருந்தது. "பணக்காரன்","மன்னன்" என ரஜினி மீண்டும் இளையராஜாவிற்கு மாறி இருந்ததால் ரஜினியையும் மெய்ண்டைன் பண்ணுவது சுலபமாக இருந்தது. இந்த கட்டத்தில் நடந்த மிகப் பெரிய மாற்றம் தான் நிரந்தரமாக இருக்கப் போகிறது என்று நான் அன்று அறியவில்லை.

மிகவும் பிடித்த இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தலைவர் நடிக்கும் "தளபதி" என்னை அதை பற்றி மட்டுமே சிந்திக்க வைத்தது. சாப்பிடும் போதும் தூங்கும் போதும் "தளபதி" தான். அந்த தீபாவளிக்கு "தளபதி" யுடன் கமலின் "குணா" மற்றும் பாரதிராஜாவின் "நாடோடி தென்றல்"  போன்ற படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. வழக்கம் போல் "தளபதி" பார்த்தாச்சு ஆனால் ரொம்ப புடிச்ச இயக்குனர் இயக்கி இருந்தும், ரொம்ப புடிச்ச நடிகர் நடித்திருந்தும், அந்த படம் பெரிய அளவு தாக்கத்தை என் மனதில் உண்டு பண்ணவில்லை மாறாக பெரிய ஏமாற்றத்தை தந்தது. ஆனால் ராஜாவின் இசை மட்டும் திருப்தியை இருந்தது. திருப்தின்னா என்ன எதிர்பார்ப்பை பூர்த்தியாவது, "தளபதி" படத்தில் என்னை போன்ற ரசிகர்களுக்கு எல்லா துறையிலும் இருந்தது ஆனால் இசையை தவிர வேறு எதுவும் மனசை ஆக்கிரமிக்கவில்லை. மனசு மீண்டும் சொல்லியது ராஜா யாருடன் இணைந்தாலும் அங்குதான் வெற்றி இருக்கும்னு. ஒருவரை ரசிக்க வெற்றியும் தேவைன்னு நினைத்திருந்த காலகட்டம் அது. ஏன்னா கல்லூரி காலம் அல்லவா..? நிச்சயம் முழு பைத்தியம் (ரசிகன்) ஆன கதை அடுத்த பகுதியில் சொல்லப்படும்.


Read more...

ஹலோ ஒரு (ரசிக) கிறுக்க ன் பேசுறேன்


"டேய் நாளைக்கு நம்ம ஊரு எக்ஸ்ல் தியட்டர்ல முரட்டுகாளை படம்டா" -- நண்பன் சொல்லியவுடன் தூக்கமே வரவில்லை. படத்தின் போஸ்டர் வைத்தே பல கதைகளை மனதில் நினைத்தவாறே தூங்கி போனேன். மறு நாள் காலைல போயி பார்த்தால், ரஜினி மன்னிக்கணும் தலைவர் கம்பீரமா நிக்கும் போஸ்டரும் அதை சுற்றி கலர் கலர் பேப்பர்களும் ஒட்டப்பட்டிருந்தன. இதற்கு முன் வேறு எந்த படம் வரும் போதும் அப்படி ஒட்டி நான் பார்த்ததில்லை. அப்பவெல்லாம் ரிக்கார்ட் பிளேயர் தான் பாட்டு போடுவதற்கு சவுண்ட் சர்வீஸ் அதைத்தான் பயன் படுத்தும். பென்ச் டிக்கெட் 50 காசுகள், உட்கார குஷன் வைத்த சீட் 1.50 , சாய்வதற்கும் உட்காருவதற்கும் குஷன் வைத்தது 2.00 ரூபாய். மிடில் கிளாஸ்-ல அதை நிரூபிக்கும் விதமாக 1.50 க்கு தான் நாங்கள் எல்லாம் அழைத்து செல்ல படுவோம். ஆனால் எனக்கோ 50 காசு பெஞ்சில் அமர்ந்து கொண்டு விசிலடிக்கும் நண்பர்களை நோக்கியே மனசு  இருந்தது, அவர்கள் எல்லாம் தனியாக வந்து படம் பார்ப்பார்கள். எங்கள் வீட்டில் அதெல்லாம் பற்றி கனவு கூட காண முடியாது. படம் ஆரம்பிக்கிறது, "எவண்டா இந்த காளையை அடக்குவான்.." அப்படின்னு சொன்னதுமே, கேமரா வானம் பார்க்கிறது, இப்ப மாதிரி கொஞ்சம் விஷயம் தெரிஞ்சால் ஏன் கேமரா மேனின் அங்கிள் மாறி போச்சுன்னு யோசித்திருப்பேன், அப்ப அதெல்லாம் முக்கியமாய் தெரியலை சீக்கிரம் தலைவரை காட்டுங்கப்பா அப்படின்னு மனசு துடிக்க ஆரம்பித்தது, தலைவர் சும்மா அப்படி துள்ளி வர்றார் எனக்கு அப்படியே காத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு. ஆனா இதெல்லாம் மனசுக்குள்ள தான் வெளில இதெல்லாம் காட்ட முடியாது காட்டுனா அவ்வளவுதான் "இனிமே சினிமாவே கிடையாதுன்னு" ஒரு கட்டளை பிறப்பிக்கப்படும். அதுனால எல்லாத்தையும் மனசுக்குள்ள அடக்கிகிட்டு படம் பார்த்தேன், அதுல வந்த பாட்டுக்கள் மட்டும் மனசை என்னவோ பண்ணுச்சு. ஆனா அவை எல்லாம் தலைவருக்காகதான்னு மனசு நினச்சுசு. அதுக்கு பின்னாடி இளையராஜாங்குற பெரிய இசை சிங்கம் இருக்குன்னு தெரியலை. ஒரு நாள் அந்த படத்தை பத்தி  பேசுறப்ப ஒரு நண்பன் சொன்னான் (ரெண்டு வயசு பெரியவன்னு நினைக்கிறேன்) "இந்த படத்துக்கு மட்டும் M.S.V மியூசிக் போட்டிருந்தா படம் எங்கேயோ போயி இருக்கும், இந்த இளையராஜா சாவு மேளம் அடிச்சு படத்தையே கெடுத்து வச்சிருக்கார்." அப்படின்னு. அப்ப அந்த நபர் இளையராஜாவை சாதி சார்ந்து பேசுறார்ன்னு தெரியாம போச்சு பத்து பதினைந்து வருடங்களுக்கு பிறகுதான் அதை தெரிந்து கொண்டேன். ஆனா அப்ப அந்த நண்பன் சொன்னதை ஆமோதிக்கும் கூட்டத்தில் நானும் ஒருத்தனாய் மண்டை ஆட்டினேன். ஏன்னா அப்படி செயலைன்னா நாளைக்கு பின்ன விளையாட்டுல சேத்துக்க மாட்டங்களே, ஆனா மனசு மட்டும் சொன்னுச்சு நல்லாத்தானே இருந்துச்சு பாட்டெல்லாம். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு அதே எக்சல் தியட்டர்ல "சகல கலா வல்லவன்" அப்படிங்குற படம் கமல் நடிச்சது வந்தது, எனக்கென்னவோ படத்துக்கு போகவே பிடிக்கல, பின்ன ஒரு ரஜினி ரசிகன் எப்படி கமல் படம் பார்க்குறது..? ஆனா அந்த படத்துல வர்ற "இளமை இதோ இதோ .." பாடல் மட்டும் மனசுல பதிஞ்சு போச்சு. அதுக்காக இந்த படத்தை பார்க்கலாம்னு தீர்மானிச்சேன், மத்தபடி நிச்சயம் கமலுக்காக இல்லைன்னு தீர்மானமா என் மனசுக்குள் சொல்லிக்கிட்டேன். அப்பவும் அந்த நண்பன் "இதுல வர்ற முக்கியமான டிரம்ஸ் இசை எல்லாம் M.S.V ஐடியாவின் படியே போட்டது.." அப்படின்னு சொன்னார். அதுக்கும் தலையசைப்பு தான் வேற வழி. ஒரு சமயம் விளையாடுறப்ப அந்த நண்பனை எதிர்த்து பேசும் படி ஆகி விட்டது, ஆனால் அதுக்கு நான் எதிர்பார்த்தமாதிரி பெரிய ரீ ஆக்ஷன் எல்லாம் இல்லை மற்றவர்கள் மத்தியில். கொஞ்சம் தைரியம் வந்துச்சுன்னே சொல்லலாம். அப்புறம் அது மாதிரியான நிறைய படங்களுக்கு அவரும் அவரை சார்ந்தவர்களும் இளையராஜாவின் இசையை குறை சொல்லாமல் அவை M.S.V ஐடியாவை வைத்தே ராஜா இசை அமைப்பதாக சொல்லி வந்தார்கள். அந்த நண்பர் அப்படி பேச பேச மனசுக்குள் ராஜாவின் இசையை இன்னும் நெருங்கி பார்க்கவே தோன்றியது. ஆனால் அதை எல்லாம் விட பெரிய ஆளாக இருந்தது ரஜினி தானே அதனால் அவற்றை புறம் தள்ளி வைத்து விட்டேன். காலங்கள் சென்றன, "பயணங்கள் முடிவதில்லை" அப்படின்னு ஒரு படம், அப்பவெல்லாம் "சண்டை பயிற்சி" அப்படின்னு டைட்டில் கார்டு வரலைன்னலே அந்த படம் ஒரு அறுவை (அதாவது இப்ப குப்பைன்னு சொல்றோமே அது மாதிரி) அப்படின்னு சொல்லி முத்திரை குத்தி அந்த படத்தை தலைவிதியேன்னு பார்க்குறது. "பயணங்கள் முடிவதில்லை" படம் ஆரம்பித்து அதில் வரும் "இளையநிலா பொழிகிறது" அப்படின்னு பாடல் ஓடுது, மனசு என்னையும் அறியாமல் ஒரு வேளை இளையராஜா நிஜமாவே பெரிய ஆளோன்னு தோனுச்சு. "சண்டை பயிற்சி" டைட்டில் கார்டில் வராமலேயே ஒரு நல்ல படம் (!?) பார்த்தேன் என்றால் அது "பயணங்கள் முடிவதில்லை" மட்டும்தான். அதுக்கு காரணம் அந்த படத்தில் வரும் பாட்டுகளே என்பது அப்போதைய என் எண்ணம். அது வரையில் அந்த நண்பருக்காக இளையராஜா பெரிய ஆளுன்னு நினைக்கிற கோணம் மாறி நிஜமாவே பெரிய ஆளுதானோ அப்படின்னு நினைக்க தோன்றியது. ஆனாலும் மனசு அவ்வளவு சீக்கிரம் ரஜினியை கீழே தள்ளுவதை ஏற்கவில்லை, ஒரு வேளை அப்பொழுதெல்லாம் ஒரு நடிகனுக்கு கிடைத்த மரியாதை ஒரு தொழில்நுட்ப கலைஞனுக்கு கிடைப்பதில்லை அதுவும் கூட ஒரு காரணமா இருக்கலாம். சுற்றி இருப்பவர்கள் ஒன்றை சொல்லும் போது அந்த வயதில் அதை உறுதிபட நம்பத்தான் தோன்றும். அதை ஆராய தோன்றாது. அப்புறம் "நான் பாடும் பாடல்" என்று ஒரு படம் முதன் முதலாக ஒரு இசை அமைப்பாளரின் பெயரை பெரிதாக  போட்டு ஒட்டிய போஸ்டர்ஸ் கண்டு சற்று அதிர்ந்தே போனேன். "இளையராஜாவின் இசையில்" என்று போட்டிருந்தார்கள், அந்த படத்தின் பாடலான "பாடவா உன் பாடலை.." பாடல் இலங்கை வானொலியில் ஒலித்துக் கொண்டே இருந்தது. ஊர்களில் நடக்கும் கல்யாணா வீடுகளில் எல்லாம் "விநாயகனே வினை தீர்ப்பவனே .." பாடலுக்கு பிறகு "பாடவா உன் பாடலை .." தான்.  இப்போ மனசுக்குள் ஒரு போராட்டமே வந்துவிட்டது என்னடா இது ஒரு இசை அமைப்பாளரை போயி ஒரு நடிகருடன் ஒப்பிடுவதா. அப்படின்னு.  அதனாலேயே இளையராஜாவை அவ்வளவு சீக்கிரம் மனம் அங்கீகரிக்க வில்லை.  "உதய கீதம்" ன்னு ஒரு படம் "சங்கீத மேகம்.." என்றொரு பாடல், ஊரில் அப்பொழுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக இசை பதிவகங்கள் (மியுசிக்கல்ஸ்) ஆரம்பித்த தருணம். எங்கு போனாலும் இந்த பாட்டு தான் பதிந்து கொண்டிருப்பார்கள். அப்பவெல்லாம் செருப்பு போடாமல் தான் பள்ளிக்கூடம் செல்வது, அப்பத்தானே வெளையாடும் போது வேகமா ஓட முடியும், செருப்பை எங்கே கழற்றி வைக்கிரதுங்குற கவலை இல்லாமல் இருக்கலாமே அதுக்காகத்தான். அப்படி போகும் போது நிழல் எங்காவது கிடைத்தால் சற்றே ஒதுங்கி இருந்துவிட்டு மீண்டும் வெயிலில் நடப்பது. அப்படி ஒதுங்குகிற இடமும் இசை பதிவகங்களா இருந்தா கூட சில மணித்துளிகள் ஒதுங்கி இருந்துவிட்டு போவது வழக்கம். அப்படி ஒதுங்கும் போதெல்லாம் கேட்ட பாடல் இளையராஜவினுடயது என்பது அப்பொழுது அறியாவிட்டாலும் பிற்காலத்தில் அறிந்து கொண்டேன், ஆனால் அந்த பாடல்கள் மனசை அப்பவே ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டன. அவ்வாறு கேட்ட சில பாடல்கள்
"கேட்டேளா இங்கே அதை பார்த்தேளா இங்கே .." -- பத்ரகாளி
"கண்ணன் ஒரு கை குழந்தை.."  -- பத்ரகாளி
"கீதா சங்கீதா..." -- அன்பே சங்கீதா
"சிறு பறவைகள் மலை முழுவதும்..."  -- நிறம் மாறாத  பூக்கள்
    "கோவில் மணி ஓசை தனை .." -- கிழக்கே போகும் ரயில்
"சிந்து நதிக்கரை ஓரம்..." --- நல்லதொரு குடும்பம்
கிட்டத்தட்ட இந்த தருணத்தில் எல்லாம் நான் கால்வாசி கிறுக்கனாய் (ரசிகன்) போயிருந்தேன் என்றுதான் எனக்கு இப்பொழுது தோன்றுகிறது. அடுத்த பகுதியில் எப்பொழுது எப்படி அரை கிறுக்கனாய் ஆகியிருந்தேன் என்று சொல்கிறேன்.


Read more...

பழசிராஜா பாடல்களில் புது ராஜா


இளையராஜாவின் தீவிர ரசிகனாக இருந்தபோதிலும், இளையராஜா மலையாளத்தில் இசை அமைக்கும் படங்களின் பாடல்களை அதிகம் கேட்பதில்லை. சென்னையில் இருக்கும் போது மறக்காமல் எல்லா மொழி இளையராஜாவின் ஒலி நாடாக்களையும் (அப்பொழுது குறுந்தகடு தமிழ் படங்களுக்கு வெளியிடுவதில்லை), வாங்கி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். அப்பொழுது மோகன்லால் (1997-என்று நினைக்கிறேன்) நடித்து வெளிவந்த "குரு" மலையாள திரைப்படத்தின் பாடல்களை கேட்டு பிரம்மித்து போயிருக்கிறேன். நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் கேட்டு பாருங்கள் அந்த மாதரியான இசை கருவிகளை இளையராஜா (எனககு தெரிந்த வரை) எந்த தமிழ் படத்திலும் உபயோகப்படுத்தியதில்லை. ஒரு பாடல் கூட சுமாரா இருக்காது எல்லாமே சூப்பரா இருக்கும். அது மாதிரியான இல்லை அதை விட ஒரு படி மேலே இருக்கும் வகையில் இந்த மாதம் வெளியாக இருக்கும் "பழசிராஜா" என்ற திரை படத்தின் பாடல்களிலும் இளையராஜா காட்டியிருக்கிறார். இது ஒரு சுதந்திர போராட்ட வீரனை பற்றிய படம், எனவே அந்த கால கருவிகளை கொண்டு மிகவும் ரம்மியமான இசையை கொடுத்துள்ளார். ஒரு பாடல் கூட சுமார் என்றே சொல்ல முடியாது, மேலும் என்னை போன்ற மலையாளம் தெரியாத வர்கள் கூட ரசிக்கும் வண்ணம் இசையை தந்துள்ளார், இசை பிதாமகன். இசைக்கு மொழியில்லை அதுவும் ராஜாவின் இசைக்கு கேட்கவே வேண்டாம் . இந்த படம் மலையாளத்தில் வெளியாகும் அதே நாளில் தமிழிலும் வெளியாவதால், இந்த பாடல்களின் தமிழ் மொழியாக்கம் கூடிய விரைவில் வெளிவரும் என்று நம்புகிறேன். பழசிராஜா பாடல்களில் ஒரு புது ராஜாவை பார்க்க முடிகிறது. இந்த பாடல்கள் உங்கள் செவிகளை தொடும் போது நீங்களும் அவ்வாறே உணர்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.


Read more...

பத்மஸ்ரீ தகுதி என்ன..?

இசைஞானி இளையராஜாவுக்கு இன்னும் பத்மஷ்ரீ விருது எதுவும் வழங்கப்படவில்லை. அது குறித்து தமிழக அரசு ஏதாவது செய்யுமா?
`பரிந்துரைதான் செய்ய முடியும் -அவருக்கு `இசைஞானி' பட்டம் கொடுத்ததே நான்தான்.''

இந்த வார குமுதத்தில் வந்த கலைஞரின் பேட்டியில் வந்தது தான் இந்த கேள்வி பதில். அது சரி ராஜா தினமும் காலையில் எழுந்தவுடன் கலைஞருக்கு போன் பண்ணுவாரா..? இல்லை வேண்டாம் குளிச்சு முடிச்சவுடனாவது போய் பார்ப்பாரா..? இல்லை கூட்டணி குழப்பம் வரும் போது சம்மந்தப்பட்ட கூட்டணி தலைவர்களுடனாவது பேச்சு வார்த்தையில் தன்னை ஈடு படுத்திக்கொண்டாரா..? இப்படி எந்த தகுதியும் (!?) இல்லாதவருக்கு எப்படிங்க பத்மஸ்ரீ கொடுக்க சொல்லி "வலியுறுத்த"முடியும்? வெறும் "பரிந்துரை" தான் செய்ய முடியும்.

இதை சொல்லும் போது கஷ்டமாத்தான் இருக்கு. அப்படி என்ன ராஜா கம்மியா சாதிச்சுட்டார்..? இல்லை அப்படி என்ன குறையை அவரது திறமையில் கண்டுவிட்டார்கள் இந்த "பரிந்துரை" குழு..? இதுவரை தமிழ் திரை உலகில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களின் திறனுக்கு ராஜாவின் திறமை கொஞ்சமும் சளைத்ததல்ல. இருந்தாலும் ....? சரிங்க இந்த பத்மஸ்ரீ விருதுக்கு தகுதிதான் என்ன ..? அதையாவது சொல்லுங்க.


Read more...

ராஜா இன்னும் "இளைய"ராஜாதான்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒலி ஒளி காட்சி "அழகர்மலை" என்ற திரைபடத்தில் வரும் பாடல். இந்த பாடலை ராஜாவின் ரசிகர்களை மனதில் வைத்து உருவாக்கி இருப்பார்கள் என்றே தோன்றுகிறது. பாடலில் ராஜாவின் ஆளுமை நன்கு தெரிகிறது, ராஜாவின் இசை இன்னும் இளமையாக இருப்பதன் ரகசியம் என்னவோ...?
சமீபத்தில் கார்த்திக் ராஜாவின் பேட்டி ஒன்றை இணைய தளத்தில் பார்த்தேன், அதில் தனது தந்தையை பற்றி குறிப்பிடும் போது "எல்லாரிடத்திலும் மிகவும் அன்பாக இருப்பார், அவருக்கு அண்ணன் தம்பிகள் மீது மிகவும் பாசம். தாயை மிகவும் நேசிப்பவர்.." என்று சொன்னார் அந்த வார்த்தைகளை மனதில் வைத்து இந்த பாட்டை பார்க்கும் போது, அவை எவ்வளவு உண்மையான வார்த்தைகள் என்று உணரமுடிகிறது.
பின் குறிப்பு: "அழகர்மலை" படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ராஜாவின் "பாண்டி நாட்டுதங்கம்" , "எங்க ஊரு பாட்டுக்காரன்", "எங்க ஊரு காவல் காரன்" போன்ற பாடல்களின் வரிசையில் இடம் பிடிக்கும் முழு தகுதியும் இருப்பதாகவே எனககு தோன்றுகிறது. நீங்களும் கேட்டு விட்டு சொல்லுங்கள்.


Read more...

கலைஞனை மதிக்காத சமூகமே...!

ஒரு குறிப்பிட்ட நபரின் கேள்விக்காக இந்த கட்டுரை எழுதப்பட்டிருந்தாலும் நீண்ட நாட்களாகவே மனதை உறுத்திக்கொண்டிருந்த ஒரு விஷயத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இது உதவும் என்று நம்பிக்கையோடு. .
சமீபத்தில் நாம் எழுதியிருந்த "ராஜாவின் புகழுக்கு மற்றுமொரு சான்று" என்ற கட்டுரையில் வந்த விஷயத்தை ஒரு நண்பர் "ஏண்டா அதையே திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருக்க ..?" என்று கேட்டிருந்தார். அதாவது சும்மா ராஜாவின் புகழை திரும்ப திரும்ப பேசிகிட்டே இருக்க என்று.
சமீபத்தில் விகடன் பொக்கிஷம் என்ற தலைப்பில் ஆனந்த விகடன் பழைய விகடனில் வந்த பேட்டிகள்,விமர்சனங்கள் என்று பல விஷயங்களையும் மீண்டும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. அந்த வரிசையில் "சிகப்பு ரோஜாக்கள்", "முதல் மரியாதை" போன்ற படங்களின் விமர்சனங்களும் வந்திருந்தது. அதில் ஒரு வரி கூட ஒரு வார்த்தை கூட ராஜாவின் இசையை பற்றி குறிப்பிடவில்லை. அது ஏன் ..? தயவு செய்து யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், காரணம், திட்டமிட்டு அவரது இசை திறமையை ஒடுக்க நினைத்த மேல்தட்டு கனவான்களே. விகடன் விமர்சனம் நம்மிடையே எந்த அளவிற்கு பிரபலம் என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை, அந்த விமர்சனத்திலேயே இப்படி என்றால்..? சரி அவர்கள் சொல்லி என்ன ஆக வேண்டியது அப்படின்னு சொல்லிட்டு போக என்னால் முடியாது. விகடனை படிக்கும் லட்சக்கணக்கான வாசகர்களில் சில ஆயிரம் பேர்களாவது இப்படி எடுத்து சொன்னால்தான் உண்டு.
அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டியது ஒரு நல்ல இசை ரசிகனின் கடமை என்று நினைக்கிறேன். அதை விகடன் இணையதளத்திலேயே பதிவு செய்து இருக்கிறேன். அதை பலபேர் ஆதரித்தும் இருக்கிறார்கள். அதுவுமில்லாமல் இப்படி பேசாமல் போய் போய் தான் இன்று ராஜாவை சாருநிவேதிதா போன்றவர்கள் விமர்சித்து கொண்டுள்ளார்கள். அதுவும் கண்மூடித்தனமாக. எல்லா படைப்பும் விமர்சனத்துக்குரியவை தான் அதில் சந்தேகம் இல்லை. ஆனால் கண்மூடித்தனமாக செய்யப்படுபவை தான் கண்டிக்கத்தக்கவை. சாருநிவேதிதா போன்றவர்கள் ஆரம்ப காலம் தொட்டே இளையராஜா நல்ல இசையை வழங்கவில்லை என்று சொல்வதுடன் இளையராஜாவின் ஒரு பாடல் கூட நல்ல பாடல் இல்லை என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்..? விமர்சனத்திலும் ஒரு தர்மம் வேண்டாமா ..? ஒரு சின்ன உதாரணம் சாருநிவேதிதா சொல்கிறார் "நான் கடவுள் படம் ஒரு உலக தரமான படம் என்பதில் சந்தேகமே இல்லை ஆனால் அதை அப்படி பார்க்க முடியாமல் செய்வது இளையராஜாவின் இசையே..." -இதற்கு மேல் அவரிடம் இருந்து எதிர்பார்க்கமுடியும். ஒரு கூடுதல் செய்தி "உலகிலேயே மிகவும் கடினமான காரியம் என்பது என்னைப் பொறுத்தவரை ஜேசுதாசின் பாடல்களை கேட்பது தான் என்ன ஒரு கொடுமையான (!!!!???) குரல் ..." இது சாருநேவேதிதா சொன்ன மற்றொரு விமர்சனம். இப்படியெல்லாம் பேசுபவர்கள் இருக்கிற பட்சத்தில், இப்படியெல்லாம் ராஜாவின் இசையை இருட்டடிப்பு செய்பவர்கள் இருக்கிற பட்சத்தில் என்னைப் போன்றவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி கொண்டிருப்போம். இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. ஒரு கலைஞனுக்கு அவன் ஊதியத்தை விட உயர்வானது ரசிகர்களின் ஆதரவு தான். இங்கு எந்த சாதி என்று பார்த்துதான் கலைஞர்களும் மதிக்கப்படுவது வேதனையிலும் வேதனை. பாரதியார் பாடல்கள் சாஸ்தீரிய சங்கீதத்தில் இடம் பெற்றால் அது தர்மம் ஆனால் அதுவே கண்ணதாசன் பாடல்கள் வந்தால் வரம்பு மீறல். பாரதியார், கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார், வீர பாண்டிய கட்டபொம்மன் , காமராஜர் போன்றோர் சாதியை ஒழிக்க பாடு பட்டார்கள் ஆனால் அவர்களுக்கு சாதி முத்திரை குத்திக்காடிய மக்களை என்னவென்று சொல்வது..? இங்கே நான் இளையராஜாவின் புகழ் பாடியதாக சுட்டிக்காட்டிய நண்பருக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன், நல்ல கலைஞனை மதிக்க வேண்டியது ஒரு சமுதாயத்தின் கடமை, இளையராஜாவை யாரும் மதிக்கலைன்னு சொல்ல வரலை ஆனால் அந்த கலைஞனின் திறமைக்கேற்ற சன்மானம் (அங்கீகாரம்) வழங்கப் படவில்லை என்பதே என் போன்றோரின் வாதம். அந்த அங்கீகாரம் கிடைக்கும் வரை நான் சொல்லிக் கொண்டேதான் இருப்பேன்.
அந்த நண்பருக்கு இன்னொரு செய்தி இசை அமைப்பாளர் ரஹ்மானுக்கு பாராட்டு விழா நடந்த பொழுது ஏற்புரை வழங்கிய அவர் சொன்னார் ... "...ஆஸ்கார் அவார்டு வாங்குவதற்கு சில சேனல்கள் இருக்கின்றன அதன் மூலமாக நாம் அப்ரோச் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அவர்களுக்கு நம்மை பற்றி தெரியாது..." அது போலத்தான் இதுவும் ராஜாவின் இசை நல்ல இசை என்று மனசுக்குள் வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதாது அது எப்பேர்பட்ட நல்லிசை என்பதை புரிய வைக்க வேண்டும். அதில் ஒரு சிறு முயற்சி தான் இது.


Read more...

ராஜாவின் புகழுக்கு மற்றுமொரு சான்று

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒளி காட்சியை பாருங்கள். இதற்கு மேலும் ராஜாவின் திறமை மீது சந்தேகம் கொள்வோர் உண்டோ...? குறிப்பாக 4.56 -லிருந்து பாருங்கள்.



Read more...

ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து.

இளையராஜாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...ராஜாவை பற்றி தட்ஸ் தமிழில் வந்த ஒரு கட்டுரை....
தேனி மாவட்டம் பண்ணப்புரத்தில் பிறந்த இசைஞானியின் இயற்பெயர் ஞானதேசிகன் என்கிற ராசையா. ஜூன் 2, 1943-ல் பிறந்தார்.தனது மிக இளம் வயதிலேயே ஆர்மோனியத்தை வாழ்க்கைத் துணையாக ஏற்றவர், இன்றுவரை இசையை ஒரு தவமாகக் கருதி, அந்த இசை உலகிலேயே வாழ்கிறார், தன்னைப் பற்றிய எந்த விமர்சனம் குறித்தும் கவலைப்படாமல்!ராஜாவின் முதல் படம் அன்னக்கிளி வெளியாகி 33 வருடங்களாகிறது. இந்த 33 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1000 படங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிப் படங்களிலும் ராஜாவின் ஆர்மோனியத்துக்கு முக்கியப் பங்குண்டு. மலேஷியா வாசுதேவன் என்ற அற்புதமான பாடகர் தொடங்கி எத்தனையோ கலைஞர்களை, பாடலாசிரியர்களை உருவாக்கியவர் இளையராஜா. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு.ஒரு முறை இத்தாலியில் இளையராஜா நிகழ்த்திய இசை நிகழ்ச்சியில் அவர் வாசித்த 'ஒன் நோட்' இசைத் துணுக்கில் அடங்கியிருந்த நுட்பத்தைப் பார்த்து, பிரபல இசை விமர்சகர் டங்கன் கிளண்டே, "இந்த மனிதர் என்னமோ ஜாலம் செய்கிறார். அது என்னவென்றுதான் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்னைப் போன்ற விமர்சகர்களின் கண்களுக்கும் அறிவுக்கும் எட்டாததாக உள்ளது அந்த இசையின் நுட்பம்" என்று எழுதினார்.இந்தியாவின் இசை விமர்சகரான சுப்புடு, "இளையராஜா வேலி தாண்டாத வெள்ளாடு மாதிரி... அவரால் இந்த இசை மரபு வேலியை ரொம்ப சேப்டியா, சுலபமா தாண்ட முடியும். பல சாகஸங்கள் செய்ய முடியும். ஆனா, இசை மரபுகளை மதிக்கிறதோட, அந்த மரபுக்குள்தான் அதிசயங்கள் நிகழ்த்தணும் என்ற வைராக்கியத்தோடு வாழும் உன்னத கலைஞர் அவர். சிந்து பைரவியில் 'மரிமரி நின்னே...'வை அவர் கொடுத்த அழகு, நம்ம இசை மரபு எந்த அளவு சோதனை முயற்சிகளுக்கு இடம் கொடுக்கிறது என்பதற்கான அடையாளம்" என்றார். சில ஆண்டுகளுக்கு முன் திருவாசகம் ஆரட்டோரியோ ஒலித் தட்டை பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிடம் கொடுக்க இளையராஜாவை அழைத்துச் சென்றார் வைகோ. அப்போது, 'சார்... இவர்தான் எங்களின் கலாச்சாரக் குரலாக உலகெங்கும் ஒலிப்பவர்!' என்று இளையராஜாவை அறிமுகப்படுத்தினார் வைகோ. அதற்கு பிரதமர் சொன்ன பதில்: "I Know...Mr. Vaiko".எந்த விருதையும் 'வாங்காத' அல்லது விருதுக்கு வணங்காத உயர்ந்த கர்வத்துக்கு சொந்தக்காரர் இசைஞானி. தனது இசையை சர்வதேச அரங்கில் லாபி பண்ண வேண்டும் என்ற 'திறமையை' வளர்த்துக் கொள்ள இன்றுவரை முயற்சித்தவரில்லை அவர். இருந்தும் மூன்று தேசிய விருதுகளை அவர் பெற்றுள்ளார் (சாகர சங்கமம், சிந்து பைரவி மற்றும் ருத்ர வீணை). ஆனால் ஆறு முறை அவருக்கு கிடைக்க வேண்டிய விருதுகள் இறுதி நேர 'ஜூரி ஆட்டத்தில்' கிடைக்காமல் போயிருக்கின்றன (மூன்றாம் பிறை, காதல் ஓவியம், நாயகன், தேவர் மகன், காலாபாணி மற்றும் ஹே ராம்). இந்திப் படவுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் இளையராஜாவின் இசையை அப்பட்டமாகக் காப்பியடித்தே பிழைப்பை ஓட்டுகின்றனர் பல இசையமைப்பாளர்கள்.பிரபல இசையமைப்பாளர் அனு மாலிக் தனது 'பேட்டா' (தக் தக் கர்னே லகா..., கோயல் சி தேரி போலி...), 'போல் ராதா போல்' (ஓ ப்யா ப்யா...) படங்களில் ராஜாவின் மிகப் புகழ்பெற்ற பாடல்களை அப்படியே உல்டா செய்து பெயர் வாங்கினார். அனாரி (சின்னத்தம்பி), விராசட் (தேவர் மகன்) படங்களில் அப்படியே ராஜாவின் பாடல்களைப் பயன்படுத்திக் கொண்டனர் பாலிவுட்டில். இந்த லிஸ்ட் ரொ...ம்ம்ம்பப் பெரியது!இதுபற்றி ஒரு முறை ராஜாவிடம் கேட்டபோது, 'விடுங்கய்யா... இதுக்காக நான் சண்டை போட ஆரம்பிச்சா, இசை அமைக்க நேரம் இருக்காது. உருவாக்கிக் கொடுக்கறது என் சுபாவம்... திருடுவது அவர்கள் சுபாவம். எதில் யாருக்கு இன்பமோ அதைத் தொடர்கிறார்கள்!," என்றார் அமைதியாக. இன்றைக்கு புதிய படங்களில் இளையராஜாவின் பிரபலமான பின்னணி இசையைப் பயன்படுத்துவதே ட்ரெண்டாகி விட்டது. சுப்பிரமணியபுரம், பசங்க, சர்வம் என பல படங்களில் 'இசை - இளையராஜா' என்று போடும் அளவுக்கு ராஜாவின் முந்தைய இசைக் கோர்வைகளைப் பயன்படுத்துவதைக் காணலாம். ராஜா என்ற கலைஞனின் இசை காலத்தை வென்றது என்பதை உணர்த்தும் செயலாகவே இதை பலரும் பார்க்கிறார்கள். சர்வதேச அளவில் சிம்பனி மற்றும் ஆரட்டோரியோ ஆகிய இசைக் கோர்வைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரே இந்திய இசைமேதை இளையராஜாதான் என்பது பிரிட்டன் இசை நடத்துடன் ஜான் ஸ்காட்டின் கருத்து. ராஜா இசையமைத்த சிம்பனி இசை வெளிவராததில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவது உண்மையே. ஆனால் அதற்கான உண்மையான காரணத்தை ராஜா சொன்னால் தவிர வேறு யாருக்கும் தெரியப் போவதில்லை. இதுபற்றி ஒருமுறை அவரிடம் கேட்ட போது, 'என்றைக்கு அந்த இசை வெளிவர வேண்டும் என்று விதி இருக்கிறதோ அன்றைக்கு வந்துவிட்டுப் போகட்டும்' என்றார். அந்த சிம்பனி இசை வெளியீட்டு உரிமை ஏவிஎம் நிறுவனத்திடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான திருவாசம் இசைக் கோர்வை, ராஜாவின் ஆரட்டோரியோ வடிவம். "ஒருவன் ஒழுக்க சீலனாக, நல்ல எண்ணம் கொண்ட மனிதனாக மாற ராஜாவின் இந்த திருவாசகம் இசைத் தொகுப்பை தினமும் காலையில் கேட்டால் போதும்" என உளமாரச் சொன்னவர் இசைமேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா. ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல... அற்புதமான கவிஞர். காவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது 'குரு' என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி. இசை அன்பர்கள் பலருக்கும் அவரது 'ஹவ் டு நேம் இட்', 'நத்திங் பட் விண்ட்' பேன்ற வெகு சில ஆல்பங்கள்தான் தெரியும். ஆனால் உண்மையில் 30க்கும் ,சினிமா இசை தவிர்த்த ஆல்பங்களை உருவாக்கியுள்ளார் இளையராஜா. அவற்றையெல்லாம் முழுசாகத் தொகுத்து வெளியிடும் முயற்சியும் நடக்கிறது. 'இசைக்கு இன்னொரு பெயர் இளையராஜா என்பதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை!' என்பது ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல கவிஞர் குல்சாரின் கருத்து.
இத்துடன் ராஜாவின் ஒரு மிகச்சிறந்த பின்னணி இசை சேர்ப்பில் வந்த ஆண்பாவத்திலிருந்து ஒரு இசை கோர்வை


Read more...

வால்மீகி பாடலும் ராஜாவின் மனசும்


ராஜாவின் பேச்சு சர்ச்சைக்குள்ளாவது இது முதல் முறை அல்ல ஆனால் இந்த முறை நடந்திருக்கும் தோற்றம் ராஜாவை பற்றிய தோற்றத்தை முற்றிலும் சிதைப்பதாக உள்ளது. ராஜா சமீபத்தில் நடந்த வால்மீகி பாடல் வெளியீட்டு விழாவில் நடந்தது இது தான் (ஒரு இணையதளத்தில் வந்த ஒளிஒலி காட்சியை பார்த்த பிறகு இதை எழுதுகிறேன்
இயக்குனர் மிஷ்கின் பேசும் பொழுது ".. இப்பொழுதுள்ள உதவி இயக்குனர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் பண்ணுங்கள். ஆனால் ஒரு படமாவது தயவு செய்து ராஜா சாருடன் பண்ணுங்கள். அப்பொழுதுதான் உங்கள் வாழ்க்கை ஒரு முழுமை பெறும். நான் அவருடன் படம் பண்ணும் பொழுது பலரும் என்னை பயமுறுத்தினார்கள், அவர் சீனியர் நீங்கள் சொல்வதை எல்லாம் அவர் கேட்க மாட்டார். நம்புங்கள் அவர் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்திற்கும் என்னை கலந்தாலோசித்த பிறகே பண்ணினார்..." இவ்விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், " சினிமா விழாக்களில் நான் அதிகமாகப் பங்கேற்பதில்லை. அதற்கு காரணம், ஒன்று தன்னைப் பற்றி அதிகம் புகழ்ந்துபேச வேண்டும். இல்லாவிட்டால் மற்றவர்களைப் பற்றிப் புகழ்ந்தோ இகழ்ந்தோ பேச வேண்டும். பெரும்பாலும் உண்மையைப் பேச முடிவதில்லை.
மேடைகளில் பேசும் பலரும் மனதார வாழ்த்துவதில்லை. சரி, ஏதோ நன்றாக இருக்கட்டுமே என்ற எண்ணத்தில்தான் வாழ்த்துகிறார்கள். உண்மை இல்லாத இடங்களைத் தவிர்ப்பதற்காகவே விழாக்களில் பங்கேற்பதைத் தவிர்க்கிறேன். விகடன் நிறுவனத்துக்காக இந்த விழாவில் பங்கேற்றுள்ளேன்.
ஒரு புதிய இயக்குநரின் படத்தில் பணியாற்றுவது குறித்து பலரும் பேசினார்கள். நான் ஏற்கெனவே பல புதுமுக இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். ஆனால், இளைஞர்கள் பலரும் வளர்ந்த பின், 'இமேஜ்' என்ற வளையத்துக்குள் மாட்டிக் கொள்கிறார்கள்.
ஒரு படம் வெற்றியடைந்துவிட்டாலே இப்போதுள்ள இயக்குநர்களை இமேஜ் ஆட்டிப்படைக்கிறது. வெற்றிப் படத்தை யார் வேண்டுமானாலும் இயக்கலாம். ஆனால் நல்ல படத்தைத் தருவதுதான் முக்கியம். பணத்தை மட்டுமே தருகிற வெற்றி முக்கியமல்ல.திறமையுள்ள புதுமுக இளைஞர்களை ஊக்குவிப்பதுதான் என் லட்சியம். நான் இப்போதுள்ள நிலைக்குக் காரணம் அன்று பஞ்சுஅருணாசலம் என்னை ஊக்குவித்து வாய்ப்பளித்ததுதான். அதனால்தான் ஷங்கரின் உதவியாளர் அனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, அவருடைய திறமைக்காக இசையமைத்தேன்.
வெற்றி என்றால் அர்த்தம் என்ன? வெற்றி பற்றி நாம் பேசக்கூடாது. ஓடுகிறவன், ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ஓடினால்தான் வெற்றி. நதியைப்போல, காற்றைப்போல, வானத்தைப்போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.சப்தஸ்வரங்கள்தான் எனக்கு உறவினர்கள். வேறு யாரும் கிடையாது. இங்கே டைரக்டர் மிஷ்கின் பேசும்போது, உதவி இயக்குனர்கள் எல்லோரும் இயக்குனராகும்போது, ஒரு படத்திலாவது என்னுடன் பணிபுரிய வேண்டும் என்று கூறினார்.
இந்த மேடையில், எனக்கு உள்ள ஒரே மீடியேட்டர் மிஷ்கின்தான். எனக்காக அவர் சிபாரிசு செய்கிறார். எனக்கு யாரும் தேவையில்லை. நான் ராகங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இறைவன் என்னை, "இங்கேயே கிடடா நாயே" என்று சொல்லிவிட்டான். அந்த சப்தஸ்வரங்களுடனே நான் கிடக்கிறேன். அங்கிருந்து நான் வெளியே வரவே மாட்டேன்,'' என்றார் இளையராஜா.

இங்கே இளையராஜா சொன்னதை நான் இப்படித்தான் பார்க்கிறேன் .. "எனக்காக இங்கே பரிந்து பேச மிஷ்கின் மட்டும் தான் இருக்கிறார். அதுவும் தேவை இல்லை ஏனெனில், நான் ராகங்கள் கூடவே வாழ்ந்து கொண்டிருப்பேன். ஒருவர் வேலை கொடுத்துதான் நான் இசையை தொட வேண்டும் என்ற நிலையில் நான் இல்லை அது கூடவே வாழவேண்டும் என்பது இறைவன் எனககு இட்ட கட்டளை அதன் படி நான் வாழ்கிறேன்".

இங்கே எல்லாமே வியாபாரமாகி போய்விட்டதே என்ற வருத்தம் ராஜாவை ரொம்பவே வாட்டி விட்டது என்றே தோன்றுகிறது. தன்னை அறிமுகப் படுத்திய பஞ்சு அருணாச்சலத்திற்கு இன்றைய தேதி வரை இலவசமாகவும், தனது பால்ய கால நண்பரான சங்கிலிமுருகன் படத்திற்கு மிக சிறப்பான பாடல்களை தருவதுடன் தொடர்ந்து அவர் படங்களுக்கு கால்ஷீட் தருவது, பாலு மகேந்திரா,கமலகாசன் போன்றவர்களின் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவது, போன்றவை வியாபாரத்தையும் மீறி ராஜா எதிர்பார்க்கும் அந்த ஆதரவு அவர்களிடம் இருந்து கிடைப்பதானால்தான். இதை அனைவரும் அறிவர், ராஜா அதை மிஷ்கின் இடத்திலும் எதிர் பார்த்து ஏமாற்றத்தின் மூலமும் அப்படி பேசியிருக்கலாம்.

இது எல்லாத்தையும் விட முக்கியம் வால்மீகி பாடல்கள் மிகச்சிறப்பாக வந்திருப்பது தான். கேட்டுவிட்டு சொல்லுங்கள் .. குறிப்பாக "கூட வருவியா ..." நம்மையும் இசையின் கூடவே இழுத்துக்கொண்டு போவதை நீங்களும் உணர்வீர்கள்.

இதை போன்ற இசை தருகிற ராஜா போன்றவர்களை தயவு செய்து சின்ன சின்ன காரணங்களை காட்டி ஒதுக்காதீர்கள் அது நம்மை போன்றவர்களுக்கு தான் பேரிழப்பு..(நம்மை என்று நான் சொல்வது தமிழர்களை மட்டுமல்ல .. இசை ரசனை கொண்ட அனைவரையும் தான்.)


Read more...

இளையராஜாவுக்கு ஆஸ்கார் கிடைக்காது பற்றி ...

ராஜாவின் ரசிகர்களாகிய எங்களுக்கு ஒன்றும் ரஹ்மானின் இந்த விருது பயணம் பொறாமை அளிக்கவில்லை. மாறாக அதை விட சிறந்த இசையமைப்பாளரான ராஜாவிற்கு ஏன் வாய்க்கவில்லை என்றே கேட்கிறோம். அலுவலகத்தில் பக்கத்து சீட் நண்பருக்கு ( நம்மை விட குறைவாகவே வேலைப் பார்க்கும்) பதவி உயர்வு கிடைக்கும் போது ஒரு ஆதங்கம் பிறப்பது இயற்கை அது போலத்தான் இதுவும். இங்கு சிலர் சொல்லியிருப்பது போல ரஹ்மானின் வரவிற்கு பின்னர் ராஜாவின் திறமை குன்றியது போல சொல்பவர்கள் ஒரு கணம் யோசித்து பாருங்கள் இரண்டு வெற்றி படங்கள் கொடுத்த மிஷ்கின் ஏன் ராஜா இசை தான் தன் படத்திற்கு வேண்டும் என்று ஒத்தைக் காலில் நின்றார்..? ரஹ்மான் கூடத்தான் ஷாருக்கானின் படங்களுக்கு இசையமைப்பதில்லை என்ற கொள்கை கொண்டுள்ளார்(அவருடன் காபிரைட் விஷயத்தில் ஏற்பட்ட சண்டை..). ராஜாவை குறை சொல்பவர்கள் மனசாட்சியோடு சொல்லுங்கள்.


Read more...

இளையராஜாவிற்கு ஏன் aascar கிடைக்க வில்லை -- விகடன்.காம் கட்டுரை

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே இன்று ஆஸ்கருக்குச் சென்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மானைக் கொண்டாடி வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது என்பதில் அணுவளவும் மாறுபட்ட கருத்து இல்லை...
ஆனால், தமிழ்த் திரை இசையில் ஒரு சகாப்தமான இளையராஜாவை, இந்தச் சூழலில் நினைவுகூறுவதும் அவசியமே.

தமிழ்த் திரையுலகை இந்திய அளவில் கவனத்தைப் பெறச் செய்த கலைஞர்களில் முதல் வரிசை இடம் இளையராஜாவுக்கு உண்டு. அவரது அற்புதமான இசைப் படைப்புகள் பலவும் எவர் லாஸ்டிங் என்று சொல்லப்படுகிற ரகத்தைச் சார்ந்தவை!
தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்படாத காலக்கட்டத்தில் தன்னால் இயன்ற வரையில் உலகத் தரத்துடன் போட்டியிட்டவர் இசை ஞானி!
* கடந்த 1976-ல் இருந்து இந்தியாவின் முன்னணி திரை இசைக் கலைஞர்களில் ஒருவராகத் திகழ்வது.* 840-க்கும் மேற்பட்ட இந்தியத் திரைப்படங்களில் பின்னணி இசையும், 5,000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கும் இசையமைத்தது.
* லண்டனில் சிம்பொனி இசையமைத்த முதல் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமையை இந்தியாவுக்குப் பெற்று தந்தது...
இத்தகைய அரிய சாதனைகள் படைத்த அற்புதக் கலைஞன்... இந்தத் தலைமுறையினருக்கு ஏற்றாற் போல் கூட இசையமைத்து அதிரச் செய்து வருவதற்கு 'நந்தலாலா', 'நான் கடவுள்' சான்றுகள்!
உலகிலுள்ள திரைப்பட கலைஞர்களுக்கு 'ஆஸ்கர்'தான் உச்சபட்ச அங்கீகாரம் என்பதை ஏற்க முடியாது என்று திரையுலக ஜீனியஸ்கள் பலரும் அவ்வப்போது சொல்லிக் கொண்டுதான் வருகின்றனர்.
ஆனால், உலக அளவில் ஒரு திரைக் கலைஞரின் புகழ் சென்றடைவதற்கு ஆஸ்கர் என்ற விருதுதான் முன்னிலைப் பெறுகிறது என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை!
இந்திய திரையுலக மேதை சத்யஜித் ரேவுக்கு 1992-ல் ஆஸ்கர் வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே... அதே வருடத்தில், இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா வழங்கியது.
அதன்பின் தான் உலக அளவில் மட்டுமின்றி, சாதாரண ரசிகர்களிடையேயும் மகத்தான படைப்பாளி சத்யஜித் ரே பற்றி வெகுவாகத் தெரிய வந்தது என்பது உண்மை.
இப்படி உலக சினிமா கலைஞர்களுக்கு மிகச் சிறந்த அங்கீகாரமாகத் திகழும் ஆஸ்கர்... உன்னதக் கலைஞர் இளையராஜாவுக்கு கிடைக்கவில்லையே என்பது தமிழ் ரசிகர்கள் பலரது ஆதங்கமாக இருக்கலாம்.
ஆஸ்கர் என்பது, அதுவும் இசைக்கான ஆஸ்கர் என்பது ஆங்கிலப் படங்களுக்கு மட்டுமே கிடைக்கும்... அது எப்படி இளையராஜாவுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்று வினவலாம்.
ரஹ்மானுக்கு அப்படி ஒரு வாய்ப்பாக 'ஸ்லம்டாக் மில்லியனர்' என்ற ஆங்கிலப் படம் அமைந்துவிட்டது என்பதையும் அறிவோம்.
ஆஸ்கருக்குச் செல்லக்கூடிய வகையிலான ஆங்கிலப் படத்தில் இளையராஜா பணிபுரிய முடியாமல் போனதற்கு காரணமென்ன?
வாய்ப்பு..!
அப்படி ஒரு வாய்ப்பு அவருக்கு அமையவில்லை...
இதற்குக் காரணம்... காலம்.
இளையராஜா உச்சத்தில் இருந்த காலத்தில் இசை மீது மட்டுமே நாட்டம் செலுத்தினாரே தவிர, தனது இசைத் திறனை உலக அளவில் கொண்டு செல்வதற்கு அடிப்படையான வியாபார யுக்தி (இந்த யுக்தி ஒரு நல்ல கலைஞனுக்கு இருப்பதில் தவறேதுமில்லை) அவருக்கு இல்லை!
இப்படி... இளையராஜாவின் திறமையை உலக அளவில் கொண்டு செல்ல முடியாத நிலைக்கு காரணமான 'வாய்ப்பு' மற்றும் 'காலம்' ஆகியவற்றின் மீது தான் அவரது ரசிகர்களின் கோபமும் ஆதங்கமும் இருக்கிறது. இளையராஜாவுக்கு கிடைக்காத வாய்ப்புகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி!
உலக அளவில் அங்கீகாரம் கிடைத்த பின்புதான் தாயகத்தில் உயரிய அங்கீகாரம் அளிக்கும் பழக்கத்தையும் மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்.
ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைக்கப்போவதற்கு முன்பே அவருக்கு உயரிய விருதுகளை மத்திய அரசு வழங்கினால், இந்தியாவை உலக நாடுகள் வெகுவாகப் போற்றும்.
ஆனால், பத்ம விருதுகளின் மூன்றாவது நிலையில் உள்ள பத்மஸ்ரீ விருதை (2000-ல்) மட்டுமே ரஹ்மானுக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது.
வெளிநாட்டைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், இந்திய இசைமைப்பாளர் ரஹ்மானைப் பற்றி தெரிந்துகொள்ள அவரது அதிகாரப்பூர்வ இணையத்தளத்துக்குச் செல்கிறார். அங்கே 'அவார்ட்ஸ்' என்ற பக்கத்தை க்ளிக்கும் போது, முதலில் காணப்படுவது வெளிநாடு அளித்த உயரிய அங்கீகாரமான 'கோல்டன் குளோப்' விருதே! அதற்குப் பின்புதான் இந்தியா அளித்த பத்மஸ்ரீ இடம்பெறுகிறது.
இதைப் பார்க்கும்போது, 'உலக அளவில் சிறப்பாக அங்கீகரிகக்ப்பட்ட கலைஞனுக்கு, அவனது தாய்நாடு குறிப்பிடத்தக்க வகையில் உயரிய அங்கீகாரம் அளித்திருக்கவில்லையே," என்று தான் அந்த வெளிநாட்டவர் எள்ளி நகையாடுவார்.
ரஹ்மான் மட்டுமின்றி, அவரைப் போன்ற உயரிய கலைஞர்கள் பலருக்கும் காலதாமதமின்றி அங்கீகரிக்கும் வழக்கத்தை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என்பது கலை விமர்சகர்களின் கருத்து.
உலக அளவில் கலைத்துறையில் இந்தியாவைப் பெருமிதம் கொள்ளச் செய்யும் வகையில் செயலாற்றி வரும் ரஹ்மானுக்கு காலதாமதமின்றி 'பாரத ரத்னா' விருது அளித்தால், இந்திய அரசின் அங்கீகாரத்துக்கே கெளரவமாக இருக்கக்கூடும்!
ரஹ்மானுக்காவது பரவாயில்லை... ஒரு பத்ம விருதைக் கொடுத்திருக்கிறது, மத்திய அரசு. ஆனால், இளையராஜாவுக்கோ... சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுகளோடு சரி!
ஆங்கிலப் படங்களுக்கும் இசையமைத்து, ஆஸ்கர் வரை இளையராஜா சென்று உரிய கவனத்தை ஈர்க்கவில்லையே என்று ஏங்கும் அவரது ரசிகர்களுக்கு... “அடுத்து வரும் மூன்று தலைமுறையினரின் ஐபாட்களில் கூட இளையராஜா பாடல்களுக்கு என்று ஒரு சிறப்பிடம் இருக்கும்" என்ற கணிப்பு மட்டுமே ஆறுதலைத் தரும்!


Read more...

பட்டவுடன் தொட்டது - - நந்தலாலா

நந்தலாலா பாடல்கள் பற்றி விகடனில் வந்த விமர்சனம் ....
இளையராஜா எனும் இசை யானை, மலை மேல் ஏறி துதிக்கை உயர்த்திப் பிளிறி, தன் ஆளுமையைப் பறைசாற்றி இருக்கிறது, 'நந்தலாலா'வின் ஒவ்வொரு ஒலிக்குறிப்பிலும்! ஒரு சுற்றுலாவின் குதூகலத்தோடு புறப்படும் 'மெள்ள ஊர்ந்து ஊர்ந்து...' பாடல் ஊர்வல உற்சாகம். 'ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே...' என்று ஆரம்பிக்கும் ஜேசுதாஸ், 'அன்பு ஒண்ணுதான் அநாதையா?' என்று கேட்கும்போது ஆரம்பிக்கும் மனப்பிசைவு பாட்டின் இறுதிவரை தொடர்கிறது. 'தாலாட்டு கேட்க நானும்...' ராஜாவின் டிபிக்கல் அம்மா கேவல். உற்சாகமான, குடும்ப மெலடி 'கைவீசி நடக்கிற காற்றே'. (இதையும், இளையராஜா குழந்தையாகவே குதூகலப்படுத்தும் 'ஒரு வாண்டுக் கூட்டமே' பாடலையும் படத்தில் நீக்கியிருப்பதாகச் சொல்கிறது குறிப்பு. வாண்டு பாட்டுக்கு கபிலனின் வாத்சல்யமான வரிகளும் அழகு!) அப்புறம் 'எலிலே... எலிலே..!' என்கிற அந்தக் குறவர் பாடல்... என்ன சொல்வது! சரோஜா அம்மாள் என்பவர் உடுக்கு அடித்துப் பாடியிருப்பது உலுக்கி எடுக்கிறது!


Read more...

பிடித்தவர்கள் -- இளையராஜா -- 2

இளையராஜாவைப் பற்றி எழுத எவ்வளவோ விஷயங்கள் உண்டு அது அத்தனையும் எழுத இன்னுமொரு பிறப்பு வேண்டும். இது அதிகப்படியான போற்றுதலாக உங்களுக்கு தோன்றினால் நீங்கள் ராஜாவை பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ளவேண்டும் என்றுதான் அர்த்தம்.

ஒரு தீபாவளிக்கு சென்னைத் தொலைக்காட்சியில் இளையராஜாவின் பேட்டி ஒளிபரப்பானது. எனக்கு தெரிந்து இளையராஜாவின் பேட்டி ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது அதுதான் முதல் முறை. அதில் சில ரசிகர்கள் இளையராஜாவைப் பற்றி தங்களது கருத்துக்களை இவ்வாறு சொன்னார்கள் "ராஜா இசை தான் எனக்கு எல்லாம்..." "தலைவா.. " "அவர் இசை போதும் எனக்கு..." இப்படி பல என்னுடன் அமர்ந்து அந்த பேட்டியை பார்த்த என் தாய், தங்கை அனைவரும் "உன்ன மாதிரி நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.." என்று சொன்ன பொழுது எனக்குள் ஒரு வித பரவசமே ஏற்பட்டது. இதை அவர்கள் எந்த கண்ணோட்டத்தில் இருந்து சொன்னார்கள் என்று எனக்கு தெரியாது எனக்கு அது பரவசாமகவே இருந்தது. இன்றைய வரைக்கும் எனக்கு அந்த உணர்வு உண்டு. தனிமையில் ராஜாவின் பாடல்கள் மட்டுமின்றி அவரைப் பற்றிய அனைத்து புகழாரங்களும் எனக்கு கண்ணீரை வரவழைப்பதாகவே இருக்கும். சத்தியமாக எனக்கும் அவருக்கும் எந்த கொடுக்கல் வாங்கல் கிடையாது. வாத்தியங்களில் அவர் வடித்தெடுத்த அந்த சந்தங்கள் என்னை அந்த பரவசம் கொள்ளவும் கண்ணீர் விடவும் வைத்து விட்டது என்றால் அது மிகையல்ல. மற்றவர்களுக்கு வாழ்க்கை அப்பா,அம்மா,மனைவி,குழந்தைகள் என்று தொடர்ந்தால் என்னைப் போன்றவர்களுக்கு அப்பா,அம்மா,மனைவி,குழந்தைகள்,ராஜாவின் இசை என்று தொடரும். மீண்டும் சொல்கிறேன் இதை ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. நடிகை ரேவதி ஒரு முறை தொலைக்காட்சியில் ராஜாவைப் பற்றி சொன்னார்கள் "ராம் கோபால் வர்மா முதலில் இயக்கிய உதயம் (தெலுங்கில் சிவா) படத்திற்கு பின்னணி இசை சேர்க்கும் பணியில் ஒரு வாக்கு வாதம் அதாவது, படத்தில் நாயகன் முதல் முறையாக அடிதடியில் ஈடு படும் பொழுது வயலின் கருவியையும் சேர்த்து வாசித்ததால் அதில் சற்றே சோகமும் இழையோடியாதாக இயக்குனர் கருதி சொன்ன பொழுது இளையராஜா சொன்னாராம் அந்த நாயகன் நன்றாக படிக்கக் கூடியவன் அப்படிப் பட்டவன் அடிதடியில் இறங்குவது சந்தோஷ பட வேண்டிய விஷயம் அல்ல அதே சமயம் அவன் எவ்வளவு ஆக்ரோஷமானவன் என்பதையும் சொல்லும் விதமாகவே இசையில் அந்த வயலின் இசையையும் இணைத்துள்ளதாக. "

-தொடர்வோம்


Read more...

பிடித்தவர்கள் -- இளையராஜா-1


இளையராஜா என்றவுடன் எனக்கு தெரிவதெல்லாம் அவரது மயக்கும் இசையை விட நம்பிக்கையான முயற்சிகளே . சிலருக்கு இது தலை கனமாவும் தெரிவதுண்டு.
நம்பிக்கைக்கும் தலை கனத்துக்கும் நூலிழை தான் இடைவெளி என்றெல்லாம் சொல்வதுண்டு எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. அது அவரவர் பார்வையை பொறுத்து அமைவது என்பது எனது பார்வை.
நம்பிக்கை என்று சொல்ல காரணம், இளையராஜா தான் முதலில் நமது பாரம்பரிய இசையையும் மேற்க்கத்திய இசையையும் இணைத்து ஒரு புது வித இசையை ஒலிக்க செய்தார். என்னைப் போன்ற எத்தனையோ இசை வாசனை அறியாதவர்களை, இசை ஒரு வித ஆடம்பர, பணக்காரத்தனமான விஷயம் என்று எண்ணி இசையை ஒதுக்கிய பலரையும் இசை அனைவரும் ரசிப்பதற்கே என்று உணர்த்தியது ராஜாவின் இசையே. மேலும் பல உள்ளங்களை இணைப்பதற்கான ஒரு மொழியாகவே பார்க்கப்பட்டது ராஜாவின் அந்த கலவையான இசை தான். ஆனால் அந்த கலவையை உருவாக்கும் போது ராஜா நிச்சயம் இது இவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் என்று எதிர்பார்க்கவில்லை இதை அவரே பல முறை நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். எனவே அந்த கலவையின் உருவாக்கத்தின் போது அது ராஜாவின் நம்பிக்கையாய் மட்டுமே இருந்திருக்க முடியும், அந்த நம்பிக்கை என்னை மிகவும் கவர்ந்தது. ராஜா சொல்வதைப் போல் அது இறைவன் ராஜாவின் இசையை ரசிக்க ரசிகர்களுக்கு இட்ட கட்டளையாய் கூட இருக்கலாம்.
அவர் வாழ்க்கை, அவரது முதல் வாய்ப்பு இவையெல்லாம் பல முறை பல பிரபலங்களால் அலசப்பட்டு விட்டது , எனவே இந்த கட்டுரையில் அவ்வாறு பார்க்காமல் ராஜா எனது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறியதன் பின்னணியை மட்டும் இங்கே சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

ராஜாவின் இசை என்ன என்ன காரணங்களுக்காக எப்படி ஒலிக்கிறது என்பதை எடுத்து சொல்ல எண்பதுகளில் இருந்த ஒரே ஊடகம் வானொலி, அதிலும் குறிப்பாக இலங்கை வானொலியின் "தமிழ் ஒலிபரப்பு கூட்டுக் சேவைஅதில் அப்பொழுது பாரத வங்கி வழங்கிய இந்த வாரத்தின் சிறந்த பத்துப் பாடல்கள் வரிசையில் பெரும்பாலும் ராஜாவின் பாடல்களே முன்னிலை வகிக்கும். உண்மையை சொல்கிறேன் அவை முன்னிலைவகித்ததால் மட்டுமே என்னைக் கவரவில்லை, அதையும் மீறி அதில் தெரிந்த ஜீவன், இசைக்கும் எனது மனத்துக்குமான இடைவெளி குறைக்கும் மாயம் எல்லாமே எனக்கு ஒரு விதமான புது உணர்ச்சியை தந்தது. மேலும் அந்த காலத்தில் வந்த விமர்சனங்களில் கூட இப்பொழுது இளையராஜாவின் இசையை குறிப்பிடுவதைப் போல குறிப்பிட்டதாக எனக்கு நினைவில்லை. இளையராஜாவின் தாக்கத்தை எனக்குள் முதலில் ஏற்படுத்திய பாடல் எனக்கு தெரிந்து "கண்ணன் ஒரு கைக் குழந்தை .." எனத் தொடங்கும் பத்ரகாளி படப் பாடல். அந்த பாடலில் மெட்டு வளையும் இடங்களில் எல்லாம் வார்த்தைகள் இட்டு நிரப்பப் பட்டிருக்கும். அதுவே அந்த பாடலின் தரத்தை அப்பொழுது வந்த பாடல்களில் இருந்து தனித்து காட்டியது. உண்மையை சொன்னால் அந்த படத்தை அப்போது நான் பார்த்திருக்க வில்லை , மேலும் அந்த கால கட்டத்தில் தொலைக்காட்சி எங்களுக்கெல்லாம் ரொம்ப தொலைதூரம் தான் ஆகையால் அந்த பாடலை மட்டும் பார்க்க கூட வாய்ப்பில்லை. செவி வழி இன்பம் அனுபவிக்கவே அப்பொழுது இருந்த வசதி வாய்ப்புகள் அனுமதித்தது. அதுவும் நல்லதற்கே என்று நான் பின்னாளில் அந்த பாடலைப் பார்க்கும் பொழுது தெரிந்து கொண்டேன். இப்பொழுது கூட மனசு சந்தோஷத்தை தேடும் பொழுது முதலில் நாடுவது இந்தப் பாடலைத்தான்.

ராஜாவைப் பற்றி அவ்வளவு சீக்கிரம் முடிக்க எனக்கு தெரியாது எனவே தொடருகிறேன் அடுத்த பதிப்பில்.


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP