Showing posts with label தமிழ் சினிமா. Show all posts
Showing posts with label தமிழ் சினிமா. Show all posts

பதிவுலகம் சார்பில் ஷங்கருக்கு நன்றி


ஷங்கர் இயக்கம் படங்கள் குறித்து எனக்கு எப்பவுமே மாற்று கருத்து உண்டு. ஆனால் அவர் தயாரிக்கும் படங்கள் குறித்து எப்பவுமே ஒரு நல்ல பார்வை உண்டு. அவரின் சமீபத்திய வெளியீடான "ஈரம்" இன்னும் பார்க்கவில்லை (ஆமாம் இன்டர்நெட்டில் இல்லாம் படம் பார்க்காம இருந்தா எப்படி பார்க்க முடியும். குறைந்த பட்சம் DVD வர்ற வரைக்கும் காத்திருப்பது என்னுடைய வழக்கம். அந்த DVD ம் இன்னும் வரவில்லை). ஆனால் இந்த படம் பெருவாரியாக பாராட்டப்பட்டாலும் பொருளாதார ரீதியாகவும் நன்றாக போய் கொண்டிருப்பதாக இணையத்தளங்களிலும்,பத்திரிகைகளிலும் படித்தேன் மகிழ்ந்தேன். இந்த படம் எப்படி வித்தியாசமாகவும், ஈர்ப்பாகவும் இருந்தததோ அதே  மாதிரி அந்த படத்தின் விளம்பரங்களிலும் ஷங்கர் கவனம் செலுத்துவது ரொம்பவும் நல்ல விஷயம். அதிலும் இன்று வந்த விளம்பரம் ஆர்குட் இணையதளத்தில் "ஈரம்" படம் பற்றி நடை பெறும் விவாதத்தை குறிப்பிட்டு வந்துள்ளது வலைப்பதிவுகளுக்கும் அதில் வரும் சினிமா விமர்சனங்களுக்கும் திரை உலகில் ஓரளவாவது  முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையை  ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ஷங்கர் போன்ற பெரிய தயாரிப்பாளர்கள் செய்யும் பொழுது பதிவுலகம் மீதான பார்வையை மற்ற தயாரிப்பாளர்கள் திருப்புவதற்கும்  ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றே நம்புகிறேன். இதை ஒரு பதிவராக பார்க்கும் பொழுது ஷங்கருக்கு நன்றி சொல்லவே தோன்றுகிறது.


Read more...

வெல்லத்தான் நினைக்கிறேன் -- ரேணிகுண்டா





தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படங்களிலேயே "பேராண்மை" க்குத்தான் முதலிடம் என்று அறிந்து மகிழ்வுற்றோம். ஒரு நல்ல படம் மீண்டும் வெற்றி பெற்றிருப்பது, தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை மெச்சுவதாகவே உள்ளது.  நான் இன்னும் "பேராண்மை" பார்க்கவில்லை. பார்த்தபிறகு அது எப்படி நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது என்பதை பற்றி பேசலாம். எப்படியோ  இந்த படம் வெல்ல வேண்டும் என்ற ("வெல்லத்தான் நினைக்கிறேன் -- பேராண்மை") நமது எண்ணம் ஈடேறி இருப்பது குறித்து மகிழ்ச்சியே. அந்த நம்பிக்கையோடு...
ரேணிகுண்டா இந்த படத்தை லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக இருந்த ஆர்.பன்னீர் செல்வம் என்பவர் இயக்கியுள்ளார். புது முகங்கள் நடித்துள்ள இந்த படத்தின் ஸ்டில்கள் மற்றும் இந்த படத்தை பற்றி வரும் செய்திகளும் இந்த படத்தை ஒரு நம்பிக்கைக்குரிய படமாக காட்டுகிறது. சமீப காலமாக இந்த மாதிரியான புது இயக்குனர்களும் புது முகங்களும் இணைந்து வரும் படங்கள் தரத்திலும் கல்லா கட்டுவதிலும் முதன்மை பெறுவது, தமிழ் பட ரசிகர்களாகிய நமக்கு கிடைக்கும் பெருமை. இந்த படமும்  வெல்ல வாழ்த்துகிறோம்.


Read more...

நாயகன் -- நூற்றில் ஒன்று




1987 ஆம் வருடம் மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில், இளையராஜா இசையில், பாலகுமாரன் வசனத்தில்,P.C. ஸ்ரீ ராம் ஒளிப்பதிவில் வந்த "நாயகன்" திரை படம் நம்ம ஊரில் எப்படி ஓடியது என்பது நாம் அறிந்ததே. இந்த படம் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "TIME" இதழில் உலகின் சிறந்த 100 படங்களுள் ஒன்றாக "நாயகன்" தேர்ந்தெடுக்கப்பட்டது, நமக்கெல்லாம் பெருமை. ஹிந்தி திரைப்படங்கள் மட்டுமே இந்திய திரைப்படங்களாக அறியப்படும் இந்த வேளையிலும் ஒரு தமிழ் படமும் உலக அளவில் சிறந்த படமாக வந்திருப்பது, நாங்களும் கலக்குவோம்ல... அப்படின்னு கத்தனும் போல இருக்கு.

 


Read more...

கனவொன்று கண்டேன்..


தமிழ்நாடு அரசு தமிழ் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவிற்கு எனக்கும் சிறப்பு அழைப்பு கொடுக்கப்பட்டு நான் சென்றிருக்கிறேன், நான் விரும்பி ரசிக்கும் ரஜினி,கமல் இன்னும் பல கலைஞர்கள் அருகருகே பார்க்கிறேன், அடடா என்ன ஒரு இனிமையான காட்சி. நிகழ்ச்சியில் 2008-ஆம் ஆண்டிற்காக கமலுக்கு சிறந்த நடிகரென கொடுக்கப்படுகிறது, பலத்த கரகோஷங்களுக்கிடையில் அந்த விருதை பெற்ற கமல் தனது நன்றியுரையில் " எனககு இந்த விருதை வழங்கிய தமிழக அரசிற்கும், தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் எனது நன்றி. இந்த மேடையில் எனது தாழ்மையான கோரிக்கை ஒன்றை என் சார்பாகவும் என் நண்பர் ரஜினி சார்பாகவும், நண்பர் இளையராஜா சார்பாகவும் வைக்கலாம் என்று நினைக்கிறேன். நாங்கள் மூவரும் தமிழ் திரை உலகில் நீண்ட தூரம் நடந்து வந்துவிட்டோம், எங்களுக்கு இதுவரை கிடைத்த விருதுகளே போதுமான அங்கீகாரம், போதுமான ஊக்கம். இனி எங்களது பெயர்கள் தமிழக அரசின் விருது பட்டியலில் இடம் பெறுவதை தயவு செய்து தவிர்க்கவும். இது அவையடக்கம் அன்று அடுத்த தலைமுறை கலைஞர்களை நாங்கள் நடந்து வந்த பாதையில் நடை போட வழி விடும் வழிதான். இதற்கான ஒப்பந்தத்தை நான் ரஜினியிடம் இருந்தும், இளையராஜாவிடம் இருந்தும் ஏற்கனவே பெற்று விட்டுதான் சொல்கிறேன். (ரஜினியும், இளையராஜாவும் ஆமோதிப்பது போல் தலையசைக்கின்றனர்).அதன் அடையாளமாக எனககு கிடைத்த இந்த விருதை அதே 2008-ஆம் ஆண்டு வெளிவந்த, பல மேடைகளில் விருது பெற்ற, "சுப்ரமணியபுரம்" படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தமிழக முதல்வர் அனுமதியோடு கொடுக்கிறேன்."
இதை பார்த்து சற்றே திகைத்து போன கலைஞரும் "எனககு கொடுத்த இந்த விருதினை நான்..."
ச்சே கனவு கலைஞ்சிருச்சே . (ஆஹா வடை போச்சே மாதிரி தான்..),


Read more...

வெல்லத்தான் நினைக்கிறேன் -- பேராண்மை

ஜனநாதன் தமிழ் திரை உலகின் சமீபத்திய நல்ல இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர். முதல் படமான இயற்கை ஒரு புது உலகத்தை, கப்பல்களில் மாலுமிகளாக வேலை செய்பவர்களின் களத்தில் ஒரு காதல் கதையை சொல்லியிருந்தார். இதில் வரும் கதாபாத்திரங்களில் ஒரு சிறு ஈர்ப்பு வர காரணம் அது பயணித்த களம் புதிது. அதற்கு பிறகு ஜீவா நடித்து வந்த "ஈ" உயிர்கொல்லி கிருமிகளை பரப்பி அதனால் உலகிற்கு வரும் ஆபத்தை ஒரு சென்னை சேரி பகுதியில்லுள்ள இளைஞனின் துணையோடு தடுப்பதை பற்றியும் நன்றாக சொல்லி இருந்தார். இந்த இரண்டு படங்களும் ஓரளவு வரவேற்பினை பெற்றதாகத்தான் நான் படித்திருக்கிறேன் அதை நம்புகிறேன். அந்த அளவில் இவரது மூன்றாவது படைப்பான "பேராண்மை" படம் வெளியாக இருக்கிறது. அதன் பாடல்கள் மற்றும் முன்னோட்ட காட்சிகள் நாளை வெளியிடப்படுவதாக அறிவிப்பு பார்த்தேன். நிச்சயம் இந்த படம் ஒரு நல்ல படமாக அமைய நிறைய வாய்ப்புகள் உண்டு. இந்த படத்தில் காடுகளின் இன்றியமையான்மை பற்றி சொல்லி இருப்பதாக படித்தேன். இந்த படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். ஜனநாதனின் ஆஸ்தான இசை அமைப்பாளர் வித்யாசாகர் தான் இந்த படத்திற்கும் இசை, நிச்சயம் "இயற்கை" அளவிற்கு நல்ல பாடலை கொடுப்பார் என்று நம்புவோமாக. இந்த படம் ஒரு நல்ல படமாக அமைந்து ஒரு நல்ல வெற்றி படமாக அமைய வாழ்த்துக்கள்.


Read more...

ஆஹா ஆஸ்கார்...வந்துடுச்சு

அதோ இதோ என்று கடைசியாக இந்தியாவிற்கு நம்ம தமிழகத்திற்கு ஆஸ்கார் வந்திடுச்சு. ரஹ்மான் இரண்டு விருதுகளை வாங்கிய நிமிடம் அடைந்த மகிழ்ச்சி அவர் தமிழில் "எல்லாப் புகழும் இறைவனுக்கே .." என்று சொன்னவுடன் பன்மடங்கானது. அவருக்கு விருது பெற்றுத்தந்த அந்த பாடலை மேடையில் அவர் இசை அமைத்து பாடிய பொழுது ஒண்ணுதான் புரிந்தது ... அதற்கு இந்த வார மதன் கேள்வி-பதிலில் வந்த பதிலையே பதிலாக தந்தால் பொருத்தமாக இருக்கும்.
விதியை மதியால் வெல்வது சாத்தியமா?
தெரியாது! ஆனால், வென்றால் மதி; தோற்றால், விதி!


Read more...

நான் கடவுள் -- ஒரு அலசல்

ஏகப்பட்ட எதிர் பார்ப்புகளுடன் வந்த பெரும்பான்மையான திரை படங்கள் தோல்வியை தழுவி உள்ள போதும் சில படங்கள் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுடன் அதை விட ஒரு படி மேலே போய் சமுதயாத்துக்கான சில நல்ல விஷயங்களை சொல்லி செல்வதுண்டு. நான் கடவுள் திரை படம் அந்த மாதிரியான வகையை சேர்ந்தது.
சோதிடர்களின் பேச்சால் தனது மகன் ருத்ரனின் சிறிய வயதிலேயே காசியில் இருக்கும் ஒரு மடத்தில் விட்டுவிடுகிறார் ருத்ரனின் தந்தை. சில வருடங்களுக்கு பிறகு அவனை தேடி காசிக்கு வருகிறார், இந்த இடைப் பட்ட காலத்தில் ருத்ரன் சாதுக்களுடன் சேர்ந்து வாழ்ந்ததில் அவரும் ஒரு சாது ஆகிறார். அதாவது காசியில் வாழும் சாதுக்கள் தங்களை கடவுளின் அவதாரங்களாகவே கருதுவார்களாம் அப்படி மாறிப் போகிறார். அவரை அவரது தந்தை அடையாளம் கண்டு திரும்பவும் தன்னுடன் மலைகோவில் என்ற ஊருக்கு கூட்டி செல்ல முடிவு பண்ணி ருத்ரனின் குருவை சந்தித்து அனுமதி கேட்கிறார். அந்த குருவும் ருத்ரனை அனுப்ப அனுமதிப்பதோடு ஒரு உறுதிமொழியையும் வாங்கி கொள்கிறார் அதாவது சாதுக்களாகிய நமக்கு குடும்ப உறவுகள் இருக்கக் கூடாது அதை எல்லாம் அறுத்தெறிந்து விட்டு என்னை வந்து அடையும் நேரம் வந்ததும் வந்து அடைவீயாக என்று. மலைகோவிலில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு அகழிகை போன்ற மண்டபத்தில் உடல் ஊனமுற்றவர்களை அடைத்துவைத்து, அவர்களைப் பயன்படுத்தி பிச்சை எடுக்க வைக்கிறார் தாண்டவன் என்பவர். வேறொரு கும்பலில் பிச்சை எடுத்து வந்த அம்சவல்லி என்ற பார்வையற்ற பெண் வந்து சேர்கிறார் இல்லை வலுகட்டயாமாக சேர்க்கப் படுகிறார். இந்த சூழலில் குடும்ப பாசத்தை வெறுத்து மலைக்கோவிலில் இருக்கும் மற்ற (போலி) சாமியார்களுடன் வந்து சேர்கிறார் ருத்ரன். அதாவது அவர்கள் வாழும் அந்த மலையில் தனக்கென ஒரு இடம் ஒதுக்கி விடுகிறார். அங்கு இருக்கும் மாங்காட்டு சாமியார் யாருடனும் பேசாமலும் யாரையும் கண் திறந்து பார்க்காமலும் இருக்கிறார். அவரே ருத்ரனின் பேச்சை கேட்டவுடன் கண் திறந்து ருத்ரனை பார்க்கிறார். அந்த அளவுக்கு ருத்ரன் அங்கிருப்பவர்களை பாதிக்கிறார் இந்நிலையில் தாண்டவன் மாதிரியே பக்கத்து மாநிலமான கேரளாவில் தொழில் செய்யும் இன்னொரு நபரும் தாண்டவனை சந்தித்து உருப்படிகளை, அந்த ஊனமுற்றவர்களை அப்படித்தான் அழைக்கிறார்கள், மாற்றுவது குறித்து பேச வருகிறார். அவரால் கோரமுகம் கொண்ட ஒரு பணக்காரருக்கு அம்சவல்லியை தாரை வார்க்க தயாராகிறார் தாண்டவன். அம்சவல்லி தப்பிப்பதற்காக மலை மேல் இருக்கும் ருத்ரனிடம் தஞ்சம் அடைகிறார். அங்கு ருத்ரன் அவரை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே முடிவு.

இந்த கதையில் பிச்சை எடுப்பவர்களின் அன்றாட வாழ்க்கை காண்பிக்கப் படும் விதம் என்னைப் போல் வெளிநாட்டில் வந்து வேலைப் பார்க்கும் குறிப்பாக மென்பொருள் துறையில் வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவே உள்ளது. எனவே பொது மக்களே தயவு செய்து மென்பொருள் துறையை இனிமேலாவது சபிக்காதீர்கள். அந்த நிழல் உலகத்தில் நடக்கும் அன்றாட சம்பவங்களே நம்மை உலுக்கி எடுக்கிறது. ருத்ரனாக வரும் ஆர்யாவின் நடிப்பு அவருடைய நடிப்புலக பயணத்தில் அடுத்த கட்டத்தை அடைந்திருப்பத்தையே காட்டுகிறது . அவர் மட்டுமல்ல அம்சவல்லியாக வரும் பூஜாவும் அப்படித்தான் தெரிகிறார். இதில் பூஜா படி மேலே சென்று நிஜமாகவே பிச்சை எடுத்தாராம் (45 நிமிடத்தில் கிட்டத்தட்ட இருநூறு ரூபாய் வசூல் பண்ணியாதாக சொன்னார்). அவர் கண் தெரியாதவராக இருப்பதற்காக அவர் அணிந்திருந்த லென்ஸ் அவரை நிஜமாகவே இருட்டு உலகத்தில் தான் வைத்திருக்குமாம். இப்படியெல்லாம் கஷ்ட்டப்பட்டு நடித்திருக்கிறார்கள் அனைவரும். ஆர்யா கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலாக இந்த படத்துக்காக அனைத்து வாய்ப்புகளையும் இழந்து தன்னுடைய பங்களிப்பை பலப்படுத்தி இருக்கிறார். அது மட்டுமல்ல சிறு சிறு கதா பாத்திரங்களில் வருபவர்கள் கூட அட்டகாசமாக நடித்து படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள். பல பேர் புது முகங்கள் என்பது ஆச்சர்யம்.
சமீபத்தில் ஒரு தொலைகாட்சியில் பாலா சொன்னது மாதிரி படத்தின் முதல் நாயகன் இளையராஜா தான். ராஜா ரமண மாலையில் கொடுத்த பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் இந்த முறை மதுபாலகிருஷ்ணன் குரலில் தேனாய் வந்திறங்குகிறது நம் காதுகளில். துவக்கப்பாடல் கதாநாயகர்களின் துவக்கப்பாடல்களின் வரிசையில் ஒரு புது அத்தியாயம். அந்த உடுக்கை சத்தம் மிரட்டுகிறது. சில இடங்களில் வசனமின்றியே பல விஷயங்களை இசையால் உணர்த்தி இருக்கிறார் ராஜா. இந்த பின்னணி இசைக்கு எந்த விருது கொடுத்தாலும் அது சாதரணமானதுதான்.
ஒளிப்பதிவு காட்சிகளை உறுத்தாமல் படம் பிடித்திருப்பதே ஆர்தர் வில்சனின் பங்களிப்பை அதிகப்படுத்தி இருக்கிறார். படக் கோர்வையும் அப்படியே உள்ளது. வசனகர்த்தா எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்து ஒரு புது வீச்சை தந்திருக்கிறது. விரக்கதியின் விளிம்பில் கடவுளை திட்டுமிடமும், இறுதிக் காட்சியில் அம்சவல்லி பேசும் வசனங்களும் படம் எதை பத்தி சொல்ல வருகிறது என்பதை தெளிவாக கோடிட்டு காண்பித்திருக்கிறது.
மொத்தத்தில் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை தருகிற படம். அந்த திருப்தியும் நீண்ட நாட்களுக்கு நம் நினைவில் இருக்கும்.


Read more...

பிடித்தவர்கள் -- இளையராஜா-1


இளையராஜா என்றவுடன் எனக்கு தெரிவதெல்லாம் அவரது மயக்கும் இசையை விட நம்பிக்கையான முயற்சிகளே . சிலருக்கு இது தலை கனமாவும் தெரிவதுண்டு.
நம்பிக்கைக்கும் தலை கனத்துக்கும் நூலிழை தான் இடைவெளி என்றெல்லாம் சொல்வதுண்டு எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. அது அவரவர் பார்வையை பொறுத்து அமைவது என்பது எனது பார்வை.
நம்பிக்கை என்று சொல்ல காரணம், இளையராஜா தான் முதலில் நமது பாரம்பரிய இசையையும் மேற்க்கத்திய இசையையும் இணைத்து ஒரு புது வித இசையை ஒலிக்க செய்தார். என்னைப் போன்ற எத்தனையோ இசை வாசனை அறியாதவர்களை, இசை ஒரு வித ஆடம்பர, பணக்காரத்தனமான விஷயம் என்று எண்ணி இசையை ஒதுக்கிய பலரையும் இசை அனைவரும் ரசிப்பதற்கே என்று உணர்த்தியது ராஜாவின் இசையே. மேலும் பல உள்ளங்களை இணைப்பதற்கான ஒரு மொழியாகவே பார்க்கப்பட்டது ராஜாவின் அந்த கலவையான இசை தான். ஆனால் அந்த கலவையை உருவாக்கும் போது ராஜா நிச்சயம் இது இவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் என்று எதிர்பார்க்கவில்லை இதை அவரே பல முறை நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். எனவே அந்த கலவையின் உருவாக்கத்தின் போது அது ராஜாவின் நம்பிக்கையாய் மட்டுமே இருந்திருக்க முடியும், அந்த நம்பிக்கை என்னை மிகவும் கவர்ந்தது. ராஜா சொல்வதைப் போல் அது இறைவன் ராஜாவின் இசையை ரசிக்க ரசிகர்களுக்கு இட்ட கட்டளையாய் கூட இருக்கலாம்.
அவர் வாழ்க்கை, அவரது முதல் வாய்ப்பு இவையெல்லாம் பல முறை பல பிரபலங்களால் அலசப்பட்டு விட்டது , எனவே இந்த கட்டுரையில் அவ்வாறு பார்க்காமல் ராஜா எனது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறியதன் பின்னணியை மட்டும் இங்கே சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

ராஜாவின் இசை என்ன என்ன காரணங்களுக்காக எப்படி ஒலிக்கிறது என்பதை எடுத்து சொல்ல எண்பதுகளில் இருந்த ஒரே ஊடகம் வானொலி, அதிலும் குறிப்பாக இலங்கை வானொலியின் "தமிழ் ஒலிபரப்பு கூட்டுக் சேவைஅதில் அப்பொழுது பாரத வங்கி வழங்கிய இந்த வாரத்தின் சிறந்த பத்துப் பாடல்கள் வரிசையில் பெரும்பாலும் ராஜாவின் பாடல்களே முன்னிலை வகிக்கும். உண்மையை சொல்கிறேன் அவை முன்னிலைவகித்ததால் மட்டுமே என்னைக் கவரவில்லை, அதையும் மீறி அதில் தெரிந்த ஜீவன், இசைக்கும் எனது மனத்துக்குமான இடைவெளி குறைக்கும் மாயம் எல்லாமே எனக்கு ஒரு விதமான புது உணர்ச்சியை தந்தது. மேலும் அந்த காலத்தில் வந்த விமர்சனங்களில் கூட இப்பொழுது இளையராஜாவின் இசையை குறிப்பிடுவதைப் போல குறிப்பிட்டதாக எனக்கு நினைவில்லை. இளையராஜாவின் தாக்கத்தை எனக்குள் முதலில் ஏற்படுத்திய பாடல் எனக்கு தெரிந்து "கண்ணன் ஒரு கைக் குழந்தை .." எனத் தொடங்கும் பத்ரகாளி படப் பாடல். அந்த பாடலில் மெட்டு வளையும் இடங்களில் எல்லாம் வார்த்தைகள் இட்டு நிரப்பப் பட்டிருக்கும். அதுவே அந்த பாடலின் தரத்தை அப்பொழுது வந்த பாடல்களில் இருந்து தனித்து காட்டியது. உண்மையை சொன்னால் அந்த படத்தை அப்போது நான் பார்த்திருக்க வில்லை , மேலும் அந்த கால கட்டத்தில் தொலைக்காட்சி எங்களுக்கெல்லாம் ரொம்ப தொலைதூரம் தான் ஆகையால் அந்த பாடலை மட்டும் பார்க்க கூட வாய்ப்பில்லை. செவி வழி இன்பம் அனுபவிக்கவே அப்பொழுது இருந்த வசதி வாய்ப்புகள் அனுமதித்தது. அதுவும் நல்லதற்கே என்று நான் பின்னாளில் அந்த பாடலைப் பார்க்கும் பொழுது தெரிந்து கொண்டேன். இப்பொழுது கூட மனசு சந்தோஷத்தை தேடும் பொழுது முதலில் நாடுவது இந்தப் பாடலைத்தான்.

ராஜாவைப் பற்றி அவ்வளவு சீக்கிரம் முடிக்க எனக்கு தெரியாது எனவே தொடருகிறேன் அடுத்த பதிப்பில்.


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP