மறுபதிப்பும் ஒரு மறுதலிப்பும்
சமீபத்தில் ஒரு நண்பர் ஒருவர் அனுப்பி இருந்த மின்அஞ்சலில் தமிழ் திரைப்படங்கள் சிலவை ஆங்கில திரைபடங்களில் இருந்து அப்படியே சுட்டவை என்றும் அதற்காக வருத்தப்பட்டிருந்தும் எழுதியிருந்தார். அதில் பெரும்பாலானவை கமல்ஹாசனின் படங்கள். அது கமலின் திறமையை கேள்வி குரியாதாக்கியதை போல நான் உணர்ந்தேன் அதன் காரணமாக வந்த மறுதலிப்பு தான் இது. கமல் பாணியில் சொல்வதென்றால் அவருடைய உண்மையான தொழில் பக்தியை கேலி செய்தது போலிருந்தது அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான்..
சினிமா ஒரு கற்பனைக்கான களம் என்பதில் மாறுபட்ட கருத்தே கிடையாது. ஒரு கற்பனை என்பதே நிஜத்தின் நிழலாக இருப்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது என்றே நான் நம்புகிறேன். INSPIRATION என்பது எந்த ஒரு கற்பனைக்கும் ஆதாரமாக இருப்பதை நாம் அறிவோம். INSPIRATION இல்லாத ஒரு படைப்பை நாம் கூற முடியுமா..? தாக்கத்திற்கும், அதை அப்படியே எடுப்பதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. நாகரிகம் முதற்கொண்டு நாம் பேசும் மொழி,உடை என அனைத்துமே பாதிப்பில் நம்முள் பதிந்து போனவையே. இங்கே எதுவும் சுயம்பு கிடையாது. அப்படி இயற்கையின் படைப்புகளே இருக்கும் போது கலைக்கு எப்படி இல்லாமல் போகும். அதை எப்படி செய்திருக்கிறார்கள் என்றே நாம் பார்க்க வேண்டும்.
அந்த பட்டியலில் கமலின் "தெனாலி" படமும் இருந்தது. சமீபத்தில் அப்துல் ஹமீது அவர்களின் பேட்டி ஒன்றில் கமல் தெனாலி படம் பண்ணுவதற்கு சில தினங்கள் முன்பு அழைத்து இலங்கை தமிழை எப்படி பேசுவது என்பது குறித்த விஷயங்களை கேட்டறிந்ததாகவும், அது குறித்த ஒரு ஒலி பேழையை முதல் நாள் மாலை வாங்கி கேட்டுவிட்டு அதை அப்படியே அடுத்தநாள் படப்பிடிப்பில் பேசியதாக சொன்னார். ஒரு சாதரண கலைஞனால் அப்படியே பேச முடியுமா..?
அவர் காப்பி அடிப்பது என்று முடிவு செய்த பிறகு எதற்கு இவ்வளவு மெனக்கெட வேண்டும், அதை அப்படியே தமிழாக்கம் பண்ணிவிட்டு போயி இருக்கலாமே. இன்னொரு விஷயத்தையும் அப்துல் ஹமீது அவர்கள் சொன்னார், அந்த படத்தில் இலங்கையில் நடைபெறும் விஷயங்களையும் இடம் பெறுமாறு பார்த்து கொண்டாராம் ஏனெனில் இது காமெடி படம் எனவே எல்லா தரப்பினரும் பார்ப்பார்கள், எனவே அனைவரையும்k இந்த விஷயம் சென்றடையும் என்றும் சொன்னாராம். அதே மாதிரி "அவ்வை சண்முகி" என்ற படத்திற்கு ஒப்பனை செய்து கொள்ள மட்டுமே கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஆகுமாம் அப்பொழுதெல்லாம் அவரால் திரவ உணவை மட்டும் உட்கொள்ளமுடியுமாம், அது மட்டுமின்றி அந்த வேடமிட்டு சென்னையின் மிகவும் பரபரப்பான பாண்டி பஜாரில் ஒரு நண்பகல் வேளையில் நடந்து சென்று தன்னை யாரும் கண்டு பிடிக்கவில்லை என்றவுடன்தான் அந்த ஒப்பனையை தேர்வு செய்தாரம். ஒரு காப்பி அடிப்பவன் செய்யும் வேலையா இது ..? கமலின் எல்லா படங்களும் இப்படித்தான் எடுக்க படுவதை போல ஒரு பரவலான பேச்சும்உண்டு. இவ்வளவு சொல்பவர்கள் எல்லாரும் சொல்லத் துணியாத கருத்தை வலியுறுத்தி "ஹே ராம்" என்ற அற்புதமான படத்தை எடுத்தாரே அப்பொழுது எங்கு போனார்கள். இந்த படம் நல்ல படம்தான் ஆனால் ஓடாது அப்படின்னு சொல்லிட்டு பக்கத்து திரை அரங்கத்தில் ஓடும் "நல்ல"படம் பார்க்க போயிருந்த அவர்களுக்காக சில உதாரணங்களை சொல்ல வேண்டியிருக்கிறது .
நான் முதல் முறையாக இளையராஜாவின் இசையில் வந்த "கனவு காணும் வாழ்க்கை யாவும்..." என்ற நீங்கள் கேட்டவை திரைப்பட பாடல், பழைய ஹிந்தி பட பாடலின் மெட்டு என்பதை கேட்டு அதிர்ந்து போனேன். அந்த பாடலையும் கேட்டேன். ஆனால் அது பாலு மகேந்திராவின் கட்டாயத்தில் போடப்பட்டதுஎன்பதை பாலு மகேந்திராவின் வாயாலேயே கேட்க நேர்ந்தது, ஆனாலும் இளையராஜாவை காப்பி அடிப்பவர் பட்டியலில் நாம் சேர்ப்பதில்லை. கவுண்டமணியின் காமெடியில் நாமெல்லாம் மிகவும் ரசிக்கும் சின்னத்தம்பி காமெடி காட்சிகள் அப்படியே ஒரு பழைய படத்தில் சுருளிராஜன் பண்ணியது ஆனால் அது கவுண்டமணி சொல்லும் "டேய் அப்பா உன்னால ஒன்னு மிச்சம்டா, கரண்ட் பில்லே நான் கட்டினது இல்லைடா ..." அப்படின்னு சொல்றதை போல வருமான்னு தான் தோணும். தமிழ் திரையுலகின் இயக்குனர் சிகரம் பாலசந்தர் இயக்கிய பெரும்பாலான படங்கள் அந்த காலத்தில் வெளிவந்த ஆங்கில நாவல்களை தழுவியாதாகவும், திரைப்படங்களை தழுவியதாகவும் இருந்ததை கமல் மேல் குற்றம் சொல்பவர்கள் நினைத்து பார்க்க வேண்டும் . இதை பாலச்சந்டருடன் பணிபுரிந்த ஒருவரே என்னிடம் நேரடியாக சொன்னார், அவர் அந்த ஆங்கில படங்களின்,நாவல்களின் பெயர்களையும் சொன்னார்.
கமல் சொன்னமாதிரி கம்பராமாயனமே ஒரு தழுவல் தான்.
இன்னொரு விஷயம் இங்கு ஆங்கில படத்தை பார்த்து எடுப்பவர்கள் அனைவரின் சார்பாகவும் நான் சொல்லவில்லை, உண்மையான கலைஞனை அந்த கும்பலோடு சேர்க்கும் "நாகரீகம்" தான் கண்டிக்கத்தக்கது. அதற்கான மறுப்புதான் இது.
0 comments:
Post a Comment