தேசியம் தண்ணீர் தருமா..?
மக்களாட்சி மீது நம்பிக்கை வைத்துள்ள என்னைப் போன்றோரை சற்றே சிந்திக்க வைத்தது சமீபத்தில் தமிழ் நாட்டிலும் அதன் அண்டை மாநிலமான கர்நாடகவிலும் நடந்து வரும் வன்முறைகளும் போராட்டங்களும். அதாவது உலகின் மிகப் பெரிய மக்களாட்சியை கொண்டுள்ள ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்கு தண்ணீர் தர சுற்றியுள்ள (கிட்டத்தட்ட) அனைத்து மாநிலங்களும் ஒவ்வொரு காரணத்தை சுட்டிக்காட்டி அதனதன் உள்ளூர் அரசியலில் கவனம் கொண்டு நியாய தர்மத்தை மீறி செயல்படுவது தேசியத்தின் மீதான நமது நம்பிக்கையை கேள்வி குறியாக மட்டுமல்ல கேலிக்குரியதாகவும் மாற்றக்கூடியதாகும். மத்திய அரசும் தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை யோசித்தே எதையும் தீர முடிவு செய்யாமல் இழுத்தடிப்பது அதை விட கொடுமை. சரி ஒரு தமிழனாக இருப்பதால் மட்டுமே நாம் தமிழகத்தை ஆதரிக்கிறமோ என்றால் இல்லை, இந்த மக்களாட்சி நாட்டில் மிக அதிக அதிகாரம் பெற்றதும் பலம்வாய்ந்ததுமான உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை அடிப்படையாக கொண்டே சொல்கிறோம். உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பினை நடைமுறை படுத்தாத கேரள அரசும், கர்நாடக அரசும் எந்த விதமான ஆபத்தின்றியே நடந்து வருவது இந்த கட்டுரையின் முதல் வரியில் சொன்னதைப் போல மக்களாட்சியில் நம்மைப் போன்றோருக்கு இருக்கும் நம்பிக்கையை குலைக்கும் விதமாகத்தான் படுகிறது. தண்ணீர் வாங்கி தமிழகம் என்ன செய்யப் போகிறது விவசாயம் தானே பண்ணப்போகிறது அதன் மூலம் இந்த நாட்டில் உள்ள அனைவரும் தானே பயன் பெறுவோம், அதை ஏன் மற்ற மாநிலங்கள் உணர மறுக்கிறது ..? கர்நாடகவிலிருந்து தண்ணீர் வாங்கி விவசாயம் பார்த்தால் அதன் மூலம் வரும் நெல் உற்பத்தியில் ஒருகுறிப்பிட்ட பகுதியை சமந்தப்பட்ட மாநிலத்திற்கு குறைந்த விலைக்கு கொடுப்பதன் மூலம் அந்த மாநிலத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் சகாய விலையில் உணவு பொருளை பெற்றிட வழி வகுக்கலாமே ..? ஆனால் அதற்கு தேசியம் தண்ணீர் தர வேண்டுமே ...? யோசிப்பார்களா சம்மந்தப் பட்டவர்கள் ..?
0 comments:
Post a Comment