ஹலோ ஒரு (ரசிக) கிறுக்க ன் பேசுறேன்


"டேய் நாளைக்கு நம்ம ஊரு எக்ஸ்ல் தியட்டர்ல முரட்டுகாளை படம்டா" -- நண்பன் சொல்லியவுடன் தூக்கமே வரவில்லை. படத்தின் போஸ்டர் வைத்தே பல கதைகளை மனதில் நினைத்தவாறே தூங்கி போனேன். மறு நாள் காலைல போயி பார்த்தால், ரஜினி மன்னிக்கணும் தலைவர் கம்பீரமா நிக்கும் போஸ்டரும் அதை சுற்றி கலர் கலர் பேப்பர்களும் ஒட்டப்பட்டிருந்தன. இதற்கு முன் வேறு எந்த படம் வரும் போதும் அப்படி ஒட்டி நான் பார்த்ததில்லை. அப்பவெல்லாம் ரிக்கார்ட் பிளேயர் தான் பாட்டு போடுவதற்கு சவுண்ட் சர்வீஸ் அதைத்தான் பயன் படுத்தும். பென்ச் டிக்கெட் 50 காசுகள், உட்கார குஷன் வைத்த சீட் 1.50 , சாய்வதற்கும் உட்காருவதற்கும் குஷன் வைத்தது 2.00 ரூபாய். மிடில் கிளாஸ்-ல அதை நிரூபிக்கும் விதமாக 1.50 க்கு தான் நாங்கள் எல்லாம் அழைத்து செல்ல படுவோம். ஆனால் எனக்கோ 50 காசு பெஞ்சில் அமர்ந்து கொண்டு விசிலடிக்கும் நண்பர்களை நோக்கியே மனசு  இருந்தது, அவர்கள் எல்லாம் தனியாக வந்து படம் பார்ப்பார்கள். எங்கள் வீட்டில் அதெல்லாம் பற்றி கனவு கூட காண முடியாது. படம் ஆரம்பிக்கிறது, "எவண்டா இந்த காளையை அடக்குவான்.." அப்படின்னு சொன்னதுமே, கேமரா வானம் பார்க்கிறது, இப்ப மாதிரி கொஞ்சம் விஷயம் தெரிஞ்சால் ஏன் கேமரா மேனின் அங்கிள் மாறி போச்சுன்னு யோசித்திருப்பேன், அப்ப அதெல்லாம் முக்கியமாய் தெரியலை சீக்கிரம் தலைவரை காட்டுங்கப்பா அப்படின்னு மனசு துடிக்க ஆரம்பித்தது, தலைவர் சும்மா அப்படி துள்ளி வர்றார் எனக்கு அப்படியே காத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு. ஆனா இதெல்லாம் மனசுக்குள்ள தான் வெளில இதெல்லாம் காட்ட முடியாது காட்டுனா அவ்வளவுதான் "இனிமே சினிமாவே கிடையாதுன்னு" ஒரு கட்டளை பிறப்பிக்கப்படும். அதுனால எல்லாத்தையும் மனசுக்குள்ள அடக்கிகிட்டு படம் பார்த்தேன், அதுல வந்த பாட்டுக்கள் மட்டும் மனசை என்னவோ பண்ணுச்சு. ஆனா அவை எல்லாம் தலைவருக்காகதான்னு மனசு நினச்சுசு. அதுக்கு பின்னாடி இளையராஜாங்குற பெரிய இசை சிங்கம் இருக்குன்னு தெரியலை. ஒரு நாள் அந்த படத்தை பத்தி  பேசுறப்ப ஒரு நண்பன் சொன்னான் (ரெண்டு வயசு பெரியவன்னு நினைக்கிறேன்) "இந்த படத்துக்கு மட்டும் M.S.V மியூசிக் போட்டிருந்தா படம் எங்கேயோ போயி இருக்கும், இந்த இளையராஜா சாவு மேளம் அடிச்சு படத்தையே கெடுத்து வச்சிருக்கார்." அப்படின்னு. அப்ப அந்த நபர் இளையராஜாவை சாதி சார்ந்து பேசுறார்ன்னு தெரியாம போச்சு பத்து பதினைந்து வருடங்களுக்கு பிறகுதான் அதை தெரிந்து கொண்டேன். ஆனா அப்ப அந்த நண்பன் சொன்னதை ஆமோதிக்கும் கூட்டத்தில் நானும் ஒருத்தனாய் மண்டை ஆட்டினேன். ஏன்னா அப்படி செயலைன்னா நாளைக்கு பின்ன விளையாட்டுல சேத்துக்க மாட்டங்களே, ஆனா மனசு மட்டும் சொன்னுச்சு நல்லாத்தானே இருந்துச்சு பாட்டெல்லாம். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு அதே எக்சல் தியட்டர்ல "சகல கலா வல்லவன்" அப்படிங்குற படம் கமல் நடிச்சது வந்தது, எனக்கென்னவோ படத்துக்கு போகவே பிடிக்கல, பின்ன ஒரு ரஜினி ரசிகன் எப்படி கமல் படம் பார்க்குறது..? ஆனா அந்த படத்துல வர்ற "இளமை இதோ இதோ .." பாடல் மட்டும் மனசுல பதிஞ்சு போச்சு. அதுக்காக இந்த படத்தை பார்க்கலாம்னு தீர்மானிச்சேன், மத்தபடி நிச்சயம் கமலுக்காக இல்லைன்னு தீர்மானமா என் மனசுக்குள் சொல்லிக்கிட்டேன். அப்பவும் அந்த நண்பன் "இதுல வர்ற முக்கியமான டிரம்ஸ் இசை எல்லாம் M.S.V ஐடியாவின் படியே போட்டது.." அப்படின்னு சொன்னார். அதுக்கும் தலையசைப்பு தான் வேற வழி. ஒரு சமயம் விளையாடுறப்ப அந்த நண்பனை எதிர்த்து பேசும் படி ஆகி விட்டது, ஆனால் அதுக்கு நான் எதிர்பார்த்தமாதிரி பெரிய ரீ ஆக்ஷன் எல்லாம் இல்லை மற்றவர்கள் மத்தியில். கொஞ்சம் தைரியம் வந்துச்சுன்னே சொல்லலாம். அப்புறம் அது மாதிரியான நிறைய படங்களுக்கு அவரும் அவரை சார்ந்தவர்களும் இளையராஜாவின் இசையை குறை சொல்லாமல் அவை M.S.V ஐடியாவை வைத்தே ராஜா இசை அமைப்பதாக சொல்லி வந்தார்கள். அந்த நண்பர் அப்படி பேச பேச மனசுக்குள் ராஜாவின் இசையை இன்னும் நெருங்கி பார்க்கவே தோன்றியது. ஆனால் அதை எல்லாம் விட பெரிய ஆளாக இருந்தது ரஜினி தானே அதனால் அவற்றை புறம் தள்ளி வைத்து விட்டேன். காலங்கள் சென்றன, "பயணங்கள் முடிவதில்லை" அப்படின்னு ஒரு படம், அப்பவெல்லாம் "சண்டை பயிற்சி" அப்படின்னு டைட்டில் கார்டு வரலைன்னலே அந்த படம் ஒரு அறுவை (அதாவது இப்ப குப்பைன்னு சொல்றோமே அது மாதிரி) அப்படின்னு சொல்லி முத்திரை குத்தி அந்த படத்தை தலைவிதியேன்னு பார்க்குறது. "பயணங்கள் முடிவதில்லை" படம் ஆரம்பித்து அதில் வரும் "இளையநிலா பொழிகிறது" அப்படின்னு பாடல் ஓடுது, மனசு என்னையும் அறியாமல் ஒரு வேளை இளையராஜா நிஜமாவே பெரிய ஆளோன்னு தோனுச்சு. "சண்டை பயிற்சி" டைட்டில் கார்டில் வராமலேயே ஒரு நல்ல படம் (!?) பார்த்தேன் என்றால் அது "பயணங்கள் முடிவதில்லை" மட்டும்தான். அதுக்கு காரணம் அந்த படத்தில் வரும் பாட்டுகளே என்பது அப்போதைய என் எண்ணம். அது வரையில் அந்த நண்பருக்காக இளையராஜா பெரிய ஆளுன்னு நினைக்கிற கோணம் மாறி நிஜமாவே பெரிய ஆளுதானோ அப்படின்னு நினைக்க தோன்றியது. ஆனாலும் மனசு அவ்வளவு சீக்கிரம் ரஜினியை கீழே தள்ளுவதை ஏற்கவில்லை, ஒரு வேளை அப்பொழுதெல்லாம் ஒரு நடிகனுக்கு கிடைத்த மரியாதை ஒரு தொழில்நுட்ப கலைஞனுக்கு கிடைப்பதில்லை அதுவும் கூட ஒரு காரணமா இருக்கலாம். சுற்றி இருப்பவர்கள் ஒன்றை சொல்லும் போது அந்த வயதில் அதை உறுதிபட நம்பத்தான் தோன்றும். அதை ஆராய தோன்றாது. அப்புறம் "நான் பாடும் பாடல்" என்று ஒரு படம் முதன் முதலாக ஒரு இசை அமைப்பாளரின் பெயரை பெரிதாக  போட்டு ஒட்டிய போஸ்டர்ஸ் கண்டு சற்று அதிர்ந்தே போனேன். "இளையராஜாவின் இசையில்" என்று போட்டிருந்தார்கள், அந்த படத்தின் பாடலான "பாடவா உன் பாடலை.." பாடல் இலங்கை வானொலியில் ஒலித்துக் கொண்டே இருந்தது. ஊர்களில் நடக்கும் கல்யாணா வீடுகளில் எல்லாம் "விநாயகனே வினை தீர்ப்பவனே .." பாடலுக்கு பிறகு "பாடவா உன் பாடலை .." தான்.  இப்போ மனசுக்குள் ஒரு போராட்டமே வந்துவிட்டது என்னடா இது ஒரு இசை அமைப்பாளரை போயி ஒரு நடிகருடன் ஒப்பிடுவதா. அப்படின்னு.  அதனாலேயே இளையராஜாவை அவ்வளவு சீக்கிரம் மனம் அங்கீகரிக்க வில்லை.  "உதய கீதம்" ன்னு ஒரு படம் "சங்கீத மேகம்.." என்றொரு பாடல், ஊரில் அப்பொழுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக இசை பதிவகங்கள் (மியுசிக்கல்ஸ்) ஆரம்பித்த தருணம். எங்கு போனாலும் இந்த பாட்டு தான் பதிந்து கொண்டிருப்பார்கள். அப்பவெல்லாம் செருப்பு போடாமல் தான் பள்ளிக்கூடம் செல்வது, அப்பத்தானே வெளையாடும் போது வேகமா ஓட முடியும், செருப்பை எங்கே கழற்றி வைக்கிரதுங்குற கவலை இல்லாமல் இருக்கலாமே அதுக்காகத்தான். அப்படி போகும் போது நிழல் எங்காவது கிடைத்தால் சற்றே ஒதுங்கி இருந்துவிட்டு மீண்டும் வெயிலில் நடப்பது. அப்படி ஒதுங்குகிற இடமும் இசை பதிவகங்களா இருந்தா கூட சில மணித்துளிகள் ஒதுங்கி இருந்துவிட்டு போவது வழக்கம். அப்படி ஒதுங்கும் போதெல்லாம் கேட்ட பாடல் இளையராஜவினுடயது என்பது அப்பொழுது அறியாவிட்டாலும் பிற்காலத்தில் அறிந்து கொண்டேன், ஆனால் அந்த பாடல்கள் மனசை அப்பவே ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டன. அவ்வாறு கேட்ட சில பாடல்கள்
"கேட்டேளா இங்கே அதை பார்த்தேளா இங்கே .." -- பத்ரகாளி
"கண்ணன் ஒரு கை குழந்தை.."  -- பத்ரகாளி
"கீதா சங்கீதா..." -- அன்பே சங்கீதா
"சிறு பறவைகள் மலை முழுவதும்..."  -- நிறம் மாறாத  பூக்கள்
    "கோவில் மணி ஓசை தனை .." -- கிழக்கே போகும் ரயில்
"சிந்து நதிக்கரை ஓரம்..." --- நல்லதொரு குடும்பம்
கிட்டத்தட்ட இந்த தருணத்தில் எல்லாம் நான் கால்வாசி கிறுக்கனாய் (ரசிகன்) போயிருந்தேன் என்றுதான் எனக்கு இப்பொழுது தோன்றுகிறது. அடுத்த பகுதியில் எப்பொழுது எப்படி அரை கிறுக்கனாய் ஆகியிருந்தேன் என்று சொல்கிறேன்.


3 comments:

shabi October 14, 2009 at 12:42 PM  

ராஜாங்கம்

வெண்ணிற இரவுகள்....! October 14, 2009 at 12:57 PM  

ராஜாங்கம் தொடரும் .......................
பின்னணி இசை ராஜா போன்று வருமா
கிராமம் ஆனாலும் நகரம் ஆனாலும்
காமெடிக்கு இசை அமைக்க முடியுமா .........
"தென் பாண்டி சீமியிலே " இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது ........
மோகனின் ம்ப௩ கடையில் வாங்கி கொண்டு தான் இருகிறார்கள் ........

fm எல்லாமே ராஜாவை நம்பி தான் இருக்கின்றது தோழரே ...எண்பதுகளில் ராஜா இல்லை என்றால் காதாலே இல்லை .........ராஜா பாடல் நம் காலத்தின்.........பிம்பம் ............
அவர் பாடல் காற்றில் கரைந்து இருக்கும்

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் October 15, 2009 at 4:15 AM  

தென்றலே நீ பேசு.... : கடவுள் அமைத்த மேடை.
அன்பு முகம் .... : ருசி கண்ட பூனை.
வாழ்கை ஓடம் ... : அவள் அப்படித்தான்.
கண் மலர்களின் ... : தைப் பொங்கல்.
தாலாட்டு ... : அச்சாணி.
ஏதோ நினைவுகள் ... : அகல் விளக்கு.
நானே நானா ... : அழகே உன்னை ஆராதிக்கிறேன்.
நிலவு நேரம் ... : அன்னை ஒரு ஆலயம்.
காதல் என்னும் ... : காயத்ரி.
ஒரு மஞ்சக் குருவி ... : பொண்ணு ஊருக்கு புதுசு.
இந்தப் பூங்காற்று .... : உதிரிப்பூக்கள்.
சோலைக் குயிலே ... : பொண்ணு ஊருக்கு புதுசு.
பூந்தோட்டம் ... : நதியைத் தேடிவந்தக் கடல்.
மாலை, இள மனது ... : அவள் ஒரு பச்சைக் குழந்தை.
அந்தப்புரத்தில் ஒரு ... : தீபம்.

ஞாபகம் வருகிறதா நண்பர்களே? ராஜாவின் ராஜாங்கம்!

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP